மதன் பாபு சிரிப்பை மறக்கவே முடியாது.. கலங்கி அழுத எஸ்.ஏ. சந்திரசேகர்!
சென்னை: பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 150 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். அவரின் தனித்துவச் சிரிப்பு ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை எடுத்த அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
1953ஆம் ஆண்டு பிறந்த மதன் பாபுவின் உண்மையான பெயர் கிருஷ்ணா மூர்த்தி. நீங்கள் கேட்டவை படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர். 'வானமே எல்லை' படத்தில் மதன் பாப் என்று மாற்றினார் இயக்குநர் கே.பாலசந்தர். அந்த படத்தை தொடர்ந்து, தேவர் மகன், ஜாதி மல்லி, உழைப்பாளி, திருடா திருடா, மகளிர் மட்டும், சதிலீலாவதி, பூவே உனக்காக, தெனாலி, ஃபிரெண்ட்ஸ், பம்மல் கே சம்பந்தம், கிரி, மாப்பிள்ளை, ஆசை, பூவே உனக்காக உள்ளிட்ட பல படங்களில் இவரது நகைச்சுவைக் காட்சி ரசிக்கும்படி இருக்கும்.குறிப்பாக ஃபிரெண்ட்ஸ் படத்தில் 'இதோ வந்துட்டேன்' என அவர் ஓடி வரும் காட்சி இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகின்றன. சன் தொலைக்காட்சியில் 'அசத்தப் போவது யாரு' நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இதனைப் பின்பற்றி பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் நடுவராக இருந்துள்ளார்.

நடிகர் மதன் பாப்: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மதன் பாப் சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய எஸ்.ஏ.சந்திர சேகர், மதன் பாப் நடிகராவதற்கு முன் இருந்தே, நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள், அவர் ஒரு இசைப்பிரியர், நானும் ஒரு இசை குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 25 வருட பழக்கம். அந்த சிரிப்பை யாராலும் மறக்கவே முடியாது. அவர் நடிகர் என்பதை தாண்டி பழகுவதற்கு இனிமையானவர். நேற்று அவரின் மரண செய்தி கேட்டு மிகவும் உடைந்து போய்விட்டேன். யாருக்கு என்ன நேரத்தில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.
நல்ல மனிதர்: அதைத்தொடர்ந்து பேசிய பாக்யராஜ், நல்ல இசைக்கலைஞன், அதையும் தாண்டி எல்லாருக்கும் பிடித்தமான நல்ல மனிதர். அவரின் சிரிக்காத முகத்தை அப்போது தான் நான் பார்த்தேன். இவருடன் இணைந்து நான் நடிக்கும் போது தான் என்னால், சிரிப்பை அடக்கவே முடியாது. என் மனதில் அவர் இந்த அளவிற்கு இடம் பிடித்து இருக்கும் போது, மக்கள் மனதில் எவ்வளவு இடம் பிடித்து இருப்பார் என்பது நன்றாக தெரிகிறது. அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட இரங்கல் செய்தியில், "நடிகர் மதன்பாப் (எ) எஸ்.கிருஷ்ணமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.இவருடைய புதுமையான சிரிப்பு தமிழ்திரையுலகில் பேசுபொருளாகியது. திரையுலகமும், தொலைக்காட்சியும் இழந்த பன்முக திறமையாளர். அவரது இழப்பு தமிழ்த் திரையுலகுக்கும், சின்னத்திரையுலகத்துக்கும் பேரிழப்பாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











