ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு சிக்கல் - என்ன செய்யப்போகிறார் எஸ் எஸ் ராஜமவுலி
சென்னை: ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு தற்போது புதிதாக பிரச்சனை எழுந்துள்ளது. அதாவது அல்லூரி சீதாராம ராஜு தேசிய சங்கத்தின் தலைவரான வீரபத்திர ராவ் என்பவர், இந்தப்படத்தின் கதை அல்லூரி சீதாராம ராஜுவின் பெயருக்கு அவப்பெயர் விளைவிக்கும் நோக்கில் உருவாகி வருவதாக கூறி வருகிறார்.
பாகுபலி எனும் பிரம்மாண்டம் இரண்டு பாகங்களாய் வெளியாகி இந்தியா மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பாகுபலி படத்தின் முதல் பாகம் 2015ஆம் ஆண்டில் வெளியானது. அந்த படத்தின் இறுதியில் கட்டப்பா பாகுபலியை கொல்ல, அந்த இடத்திலே படம் முடிந்தது.

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்வியே பலரிடத்தில் இருந்தது. அந்த கேள்வியே இரண்டாம் பாகத்திற்கு மிக பெரிய விளம்பரமாய் மாறியது. பாகுபலி இரண்டாம் பாகம் 2017ஆம் ஆண்டில் வெளியானது. இந்த முதல் பாகத்தை விட மிக பிரம்மாண்டாய் இருக்க படம் 1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது.
இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் படத்தின் இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமவுலி எஸ்.எஸ்.ராஜமவுலி பாகுபலிக்கு முன் ஸ்டூடண்ட் நம்பர் 1, சை, சத்ரபதி, விக்ரமர்குடு, யமடோங்கா, மஹதீரா, நான் ஈ ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.
தற்போது ராஜமவுலி இயக்கி வரும் படம் தான் ஆர்.ஆர்.ஆர். இந்தப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படம் 2020ல் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், தற்போது இந்த படத்திற்கு புதிதாக ஒரு பிரச்சனை கிளம்பியுள்ளது. அதாவது, அல்லுரி சீதாராம ராஜு தேசிய சங்கத்தின் தலைவர் என்று கூறிக்கொண்டு வீரபத்திர ராவ் என்பவர், இந்தப்படத்தின் கதை அல்லூரி சீதாராம ராஜுவின் பெயருக்கு அவப்பெயர் விளைவிக்கும் நோக்கில் உருவாகி வருவதாக கூறி வருகிறார்.
மேலும் அப்படி அல்லூரி கதையில் ஏதாவது திரித்துக் கூறப்பட்டதாக தெரிந்தால் நாங்கள் அந்த விஷயத்தை சும்மா விடமாட்டோம் என்றும் எச்சரித்துள்ளார். அதுமட்டுமல்ல, சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜூவும் கொமரம் பீமும் சந்தித்துக் கொண்டார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் என்கிற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
இதற்கு படக்குழு தரப்பில் இருந்து இதுவரை, எந்த பதிலும் வரவில்லை. அவர்களின் பதிலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











