‘கைலாசாவில் பிரதமர் பதவி வேண்டும்’.. சைடு கேப்பில் நித்தியிடம் அப்ளிகேஷன் போட்ட பிரபல நடிகர்!
நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் பிரதமர் ஆகப்போவதாக நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை: நித்யானந்தாவின் கைலாசா நாட்டில் தனக்கு பிரதமர் பதவி கிடைக்க வேண்டும் என நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு வகையான பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி சாமியார் நித்யானந்தா. இவர் எங்கிருக்கிறார் என்பது இன்னமும் மர்மமாகவே இருக்கிறது. ஆனால் தினம் தினம் புதுப்புது வீடியோக்களாக அப்லோட் செய்து போலீசை டென்ஷனாக்கிக் கொண்டிருக்கிறார்.
நித்யானந்தா தனி நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதாகவும், அதற்கு ஸ்ரீகைலாசா என பெயர் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஈகுவடார் நாட்டுக்கு அருகே தனித்தீவு ஒன்றில் அந்த நாடு இருப்பதாக பலரும் பேசி வருகிறார்கள்.

நித்தியானந்தாவுக்கு ஆதரவு
இந்த சூழலில் நித்யானந்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நடிகர் மற்றும் அரசியல்வாதி எஸ்.வி.சேகர், ஸ்ரீகைலாசா நாட்டின் பிரதமர் பதவியை தனக்கு தரவேண்டும் என கேட்டுள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் சேனல் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நித்யானந்தாவுக்கும் தனக்குமான உறவு குறித்து பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

நித்தியுடனான உறவு
"சில ஆண்டுகளுக்கு முன்னர் எனது தந்தை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அப்போது நித்யானந்தா எனது வீட்டிற்கு வந்து ஹீலிங் முறையில் அவரை குணப்படுத்தினார். அதனால் தான் அவர் மீது எனக்கு மரியாதை ஏற்பட்டது.
இந்து மதத்தை விமர்சிக்கிறார்கள்
நித்யானந்தாவை அசிங்கமாக பேசுவதை மக்கள் நிறுத்த வேண்டும். நித்யானந்தா பல குழந்தைகளின் மூன்றாவது அறிவை திறந்துவைத்தவர். நித்யானந்தாவை வைத்து இந்து மதத்தை அசிங்கமாக விமர்சிக்கிறார்கள்.
இந்து நாடு
ஒரு இந்து நாடை உருவாக்க வேண்டும் என்பதற்காக தான் ஒரு தீவை விலைக்கு வாங்கியிருக்கிறார் நித்யானந்தா. அவர் ஒன்றும் கறுப்பு பணத்தில் அந்த தீவை வாங்கவில்லை. ஒரு இந்து நாடு உருவாவதை தாங்க முடியாமல் தான் நித்யானந்தாவை அழிக்க பார்க்கிறார்கள்.

பிரதமர் பதவி
ஆனால் நித்யானந்தா நிச்சயம் ஸ்ரீ கைலாசா நாட்டை நிறுவுவார். அப்படி அவர் அந்த நாட்டை உருவாக்கும் போது, எனக்கு பிரதமர் பதவி கொடுத்தால் நானும் அங்கு செல்வேன். எனக்கு இங்கு குடும்பம் இருப்பதால், அங்கு அவ்வப்போது சென்றுவிட்டு வருவேன்", என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











