ஃப்ரெண்ட போல யாரு மச்சான்.. எஸ்.ஏ.சந்திரசேகர் சீரியலில் இருந்து விலகிய சஞ்சீவ் - காரணம் விஜய்யா?
சென்னை: விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கும் சீரியலில் இருந்து விஜய்யின் நண்பரும், நடிகருமான சஞ்சீவ் விலகியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு நண்பர்கள் வட்டம் குறைவே. அவருக்கென்று சஞ்சீவ், ஸ்ரீநாத், சுஜய், ராம்குமார், மனோஜ் என ஐந்து பேர் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவருமே சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும்போது பழக்கமாகி இன்றுவரை நட்புடன் பழகிவருகின்றனர். விஜய்யும் அடிக்கடி இவர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சஞ்சீவ், ஸ்ரீநாத் சினிமாவில்: விஜய்யின் நண்பர்களில் சஞ்சீவும், ஸ்ரீநாத்தும் சினிமாவில் இருக்கிறார்கள். சஞ்சீவ் சின்னத்திரையில் கோலோச்சிவிட்டு பெரிய திரையில் சில படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல் ஸ்ரீநாத் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜீவாவிடம் உதவியாளராக இருந்துவிட்டு நடிகராக மாறியவர். அவரும் பல படங்களில் நடித்திருக்கிறார். இருப்பினும் ஸ்ரீநாத்துக்கு இயக்குநர் ஆக வேண்டுமென்பதுதான் ஆசை என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவர்கள் வேறு வேறு தொழில் செய்துவருகிறார்கள்.
சின்னத்திரையில் கலக்கும் சஞ்சீவ்: சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரி ஆனவர். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்தவர், விஜய் டிவி, ராஜ் டிவி உள்ளிட்ட சேனல்களிலும் நடித்து புகழ் பெற்றவர். சஞ்சீவின் நடிப்பிற்கென்று பல வீடுகளில் ரசிகர்களாக இருக்கின்றனர். அதேபோல் சினிமாவிலும் பத்ரி, புதிய கீதை, மாஸ்டர், யானை, பாலைவன சோலை உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

புதிய சீரியல்: இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமாரின் ராடான் நிறுவனம் கிழக்கு வாசல் என்ற சீரியலை தயாரிப்பதாக கூறப்பட்டது. இந்த சீரியலானது குடும்பத்திற்கு முக்கியத்துவம் உள்ளதாகவும், அப்பா - மகனுக்கு இடையே நடக்கும் கதை எனவும் சொல்லப்பட்டது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் விசுவின் சம்சாரம் அது மின்சாரம் போன்ற கதை என பேசப்பட்டது. இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடிப்பதற்கு கமிட்டானார். சஞ்சீவும் கமிட்டானார். இதன் தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது.
விலகிய சஞ்சீவ்: இந்நிலையில் ஷூட்டிங் தொடங்கி சில நாள்கள் நடைபெற்ற சூழலில் சீரியலில் இருந்து சஞ்சீவ் விலகியிருக்கிறார். இதற்கான காரணங்கள் குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் கதை ரீதியாக சஞ்சீவுக்கு கொஞ்சம் ஒத்துவராததால்தான் கிழக்கு வாசலில் இருந்து வெளியேறிவிட்டார் என்ற ஒரு தகவலும், ஹீரோயினாக கமிட் ஆன ரேஷ்மாவுடனான ஜோடி பொருத்தம் சரியாக இல்லாததால் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை நடிக்க வைக்க சீரியல் குழு முடிவு எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

விஜய்யின் தந்தைதான் காரணமா?: இதற்கிடையே விஜய்க்கு மிக மிக நெருக்கமாக இருப்பவர் சஞ்சீவ். அதேசமயம் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே நீண்ட காலமாகவே மனஸ்தாபம் ஓடிக்கொண்டிருப்பதாக ஒரு பேச்சும் உண்டு. எனவே இப்படிப்பட்ட சூழலில் எஸ்.ஏ.சந்திரசேகருடன் இணைந்து நடிப்பது சரியாக இருக்குமா என்ற யோசனையில்தான் சஞ்சீவ் விலகிவிட்டார். என் ஃப்ரெண்ட போல யாரு மச்சான் என்ற விஜய் பாட்டு வரியை சஞ்சீவ் உண்மையாக்கிவிட்டார் எனவும் சிலர் கூறுகின்றனர்.
ஆனால் விஜய்க்கும், எஸ்.ஏ.சிக்கும் இப்போது எந்த மனஸ்தாபமும் இல்லை. அவர்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி தந்தைக்கும், மகனுக்கும் மனஸ்தாபம் இருந்தாலும் இடையில் சஞ்சீவுக்கு இதில் என்ன வந்தது. எனவே விஜய்யால்தான் சஞ்சீவ் சீரியலில் இருந்து விலகியிருக்கிறார் என வேண்டுமென்றே சிலர் கிளப்பிவருகின்றனர். சஞ்சீவ் விலகியதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம் எனவும் விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்துவருகிண்றனர்.


Click it and Unblock the Notifications











