60 வருஷமா பேசி பேசியே நாட்டை கெடுத்தாங்க.. ஒரே வார்த்தையில் கிழித்தெறிந்த எஸ்.ஏ.சந்திரசேகர்!
சென்னை: தமிழக முதல்வராகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகவும் இருக்கும் விஜய், இன்று தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவர் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் பிறந்தநாள் இது என்பதால், ஒட்டுமொத்த தமிழகமும் விழாக் கோலம் பூண்டுள்ளது. தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள் மற்றும் அமைச்சர்கள் இந்த நாளை மிகச் சிறப்பாகத் திட்டமிட்டுக் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆனந்தன் ஏற்பாட்டில், மேல்மலையனூர் அங்காளம்மன் பரமேஸ்வரி கோவிலில் சிறப்புப் பாலாபிஷேகமும், விசேஷ மகா பூஜைகளும் நடத்தப்பட்டன.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வரின் தந்தையும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவர் பேசுகையில், ஒரு மகனைப் பெற்ற தந்தையாக, அவன் இந்த நாட்டின் முதல்வராக உயர்ந்து நிற்பதைப் பார்ப்பதை விட எனக்கு வேறென்ன பெரிய மகிழ்ச்சி வேண்டும்? தனக்காக வாழ்வது வாழ்க்கை இல்லை, பிறருக்காகவும் இந்த நாட்டு மக்களுக்காகவும் வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை. அதை என் மகன் செய்கிறான் என்றார்.

பேசிப் பேசியே நாட்டை கெடுத்தாங்க: அப்போது அங்கிருந்த செய்தியாளர் ஒருவர், விஜய் அரசியல் மேடைகளிலோ அல்லது பொது இடங்களிலோ அதிகமாகப் பேசுவதே இல்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே, அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? என்று அதிரடியாகக் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பேதில் அளித்த எஸ்.ஏ.சி. கடந்த 60 வருடமாக இந்த நாட்டுல பேசிப் பேசியே நாட்டை கெடுத்தாங்க. இவரும் அதையே செய்ய வேண்டுமா? உங்களுக்குப் பேசுவது முக்கியமா... இல்லை மக்களின் தேவையைச் செயல்படுத்துவது முக்கியமா? செயல்படுவதுதானே முக்கியம் அதை அவர் செய்கிறாரா இல்லையா?
ஏன் வீணாக பேச வேண்டும்: இதைச் செய்து விடுவோம், அதைச் செய்து விடுவோம் என்று பேசிவிட்டு, பிறகு அதைச் செயல்படுத்தாமல் ஏமாற்றுவதை விட, வாயைத் திறந்து பேசாமல் தன்னுடைய செயலில் மட்டுமே நிருபித்துக் காட்டுகிறார் விஜய். அதைத்தான் இப்போதும் அவர் செய்து கொண்டிருக்கிறார். அப்போது எதற்கு அவர் வீணாகப் பேச வேண்டும்? என்றார். தொடர்ந்து பேசிய எஸ்.ஏ.சி அத்தனை வருஷமாகத் தமிழ்நாட்டில் இருந்த பிற அரசியல் கட்சிகள் எல்லாமே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தானே தொடங்கப்பட்டன? ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் யாருக்காவது அதிகாரத்தைப் பகிர்ந்துகொடுத்தார்களா? ஒரு அதிகாரப் பகிர்வை அவர்கள் செய்திருக்கிறார்களா? ஆனால், விஜய் வந்தவுடனேயே எல்லோரையும் அரவணைத்து, அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து இந்த நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அந்த அதிகாரம் தன் கையில் இருந்தால் தானே நாட்டு மக்களுக்கு அந்த நன்மையைச் செய்ய முடியும், அந்த வாய்ப்பை அவர் மிகச் சரியாகப் பயன்படுத்துகிறார் என்றார்.


Click it and Unblock the Notifications