மகள் வித்யாவின் மரணம்.. விஜய்யை டாக்டராக்க ஆசைப்பட்டேன்.. எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி!
சென்னை: நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாள் சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், விஜய்யின் பெற்றோர்களான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் கலந்து கொண்டு, 50 கிலோவில் எடை கொண்ட பிரம்மாண்ட கேக்கை வெட்டி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து பேசிய எஸ்.ஏ. சந்திரசேகர், விஜய் பிறந்த போது நான் சாதாரண உதவி இயக்குநராக இருந்தேன், ஷோபா மேடை பாடகியாக இருந்தார். இந்த காலகட்டத்தில் தான் எக்மோர் மருத்துவமனையில் விஜய் பிறந்தார். அவர் பிறந்த போது இவ்வளவு பெரிய அதிர்ஷ்டமான குழந்தையாக இருப்பார் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. உலகம் எல்லாம் கொண்டாடும் ஒரு குழந்தையை இறைவன் எங்களுக்கு கொடுத்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். இதைவிட வேறு மகிழ்ச்சி எதுவும் எங்களுக்கு இருக்க முடியாது.

மகள் வித்யா: விஜய் சினிமாவில் நடிக்க வருவார் என்று நான் நினைக்கவே இல்லை, வித்யாவுக்கு மூன்றரை வயசு இருக்கும் போது, லுக்மியா நோயால் இறந்துவிட்டார். எங்கள் குடும்பத்தோட ஒட்டுமொத்த சந்தோஷமும் போய்விட்டது. வித்யா லுக்மியாவால் இருந்ததால், அந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவராக விஜய் ஆகவேண்டும் என்று ஆசைபட்டேன். இந்த நோய்க்கு மட்டுமே சிகிச்சை அளிக்க மருத்துவமனை கட்டவேண்டும், இனி எந்த குழந்தையும் இந்த நோயால் உயிரிழக்கக்கூடாது என்று நினைத்தேன்.
கடுமையாக உழைத்தார்: ஆனால், அவர் சினிமாவில் நடிக்கப்போகிறேன் என்று சொன்னதும், என் ஆசையை சொன்னேன். ஆனால், விஜய் பிடிவாதமாக இருந்தார். அவர் எப்போதுமே எடுத்த முடிவில் பின்வாங்க மாட்டார். எனவே என் ஆசையைவிட அவர் ஆசை பெரியதாக தெரிந்ததால், அதற்கான ஒரு மேடையை அமைத்துக்கொடுத்தேன். அதில் அவர் கடுமையாக உழைத்து உழைத்து தன்னை உயர்த்திக்கொண்டு இன்று இந்த உச்சத்தில் இருக்கிறார். வெற்றி என்ற படத்தில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இன்று வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி இருக்கிறார், அவை எல்லாமே இயற்கையாக அமைந்தது.
வெற்றி பெறுவார்: விஜய் எதை செய்தாலும் ஆயிரம் முறையோசித்துத்தான் செய்வார். அப்படி முடிவு செய்து விட்டால் அதில் இருந்து பின்வாங்க மாட்டார். அப்படி யோசித்துத்தான் தன்னை வளர்த்த தமிழக மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று இன்று அரசியலில் இறங்கி இருக்கிறார். அவரின் இந்த முயற்சி வெற்றி அடைய வேண்டும், அதற்கு உறுதுணையாக நான் இருக்க வேண்டும் இது தான் என் பிறந்த நாள் வாழ்த்து என்று எஸ்.ஏ.சந்திரசேகர் அந்த நிகழ்ச்சியில் பேசினார். அப்போது உடன் இருந்த ஷோபா சந்திரசேகரும் மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறினார்.
50வது பிறந்த நாள்: தளபதி விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு கொண்டாட உள்ள முதல் பிறந்த நாள் என்பதால், இந்த 50வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மிகப்பெரிய அளவில் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு காமன் டிபிக்கள் மற்றும் மாஷ் அப் வீடியோக்கள் வெளியாக காத்திருக்கின்றன. மேலும், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்திலிருந்து ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட இயக்குநர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











