கள்ளச்சாராய மரணம்.. இத்தகைய இழப்பு நம் முன் கோரக் கொடூர முகம் காட்டுகிறது..ராமராஜன் உருக்கம்!
சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குறித்து இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ராமராஜன் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து ஆண்களுடன் பெண்களும் மரணத்திருப்பதும், தாய்-தந்தை என இரண்டு பேரையும் இழந்துவிட்டு குழந்தைகள் கண்ணீர் வடிப்பதை பார்க்கும் போது நெஞ்சே பதை பதைக்கிறது. கள்ளச்சாராயம் குடித்த பலர் வாந்தி, மயக்கம், தலைவலி, வயிறு எரிச்சலால் பாதிக்கப்பட்டு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

கள்ளச்சாராய மரணம்: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும்,இதற்கான காரணத்தை ஆராயவும், இனிவரும் காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
மெத்தனால் காரணம்: இந்த மரணத்திற்கு மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்தது தான் பலர் உயிரிழப்பிற்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, பத்துக்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
நினைத்துப்பார்க்க முடியவில்லை: அந்த வகையில் நடிகர் ராமராஜன் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில், 50 மரணங்கள் என்பது ஒரு சின்ன கிராமத்தில் நினைத்துப் பார்க்க இயலவே இல்லை. கிராமங்களில் ஒரு மரணம் என்றாலே அத்தனை வீடும் சோறு பொங்காது. சாப்பிடாது. அத்தனை பங்கெடுக்கும். இங்கு 50 வீடுகள் அதன் சொந்த பந்தங்கள் எப்படி துயர் கொண்டிருப்பவர் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்னால். கொரோனா கொத்து கொத்தாய் அள்ளிய மரணங்கள் போல் இந்த கள்ளச்சாராய சாவு எண்ணிக்கையும் பயப்படுத்திக் கொண்டே உயர்கிறது. இழப்பு நாம் இயல்பாக சந்திப்பது. ஆனால் இத்தகைய இழப்பு நம் முன் கோரக் கொடூர முகம் காட்டி செல்கிறது.
குடிகளுக்கு ஏன் குடி: மனிதர்களை குடி எப்படி கொல்கிறது என்பது நிகழ்கால பாடமாக நிகழ்ந்திருக்கிறது. குடிகளுக்கு ஏன் குடி? அவசியமற்ற ஒன்றை மகிழ்ச்சி என்ற பெயரில் மக்கள் வழக்கமாகக் கொண்டிருப்பது என்ற குடும்பங்களின் நல்லுறவை சிதைக்கிறது. இன்றைய காலகட்டத்தில் எதிர்கால சந்ததிகளுக்கு நாம் செய்ய வேண்டியது மது கலாச்சாரமா? போதைப் பொருள் கலாச்சாரமா? தெரியவில்லை. அவர்கள் நன்றாக ஆரோக்கியத்துடன் குடும்பங்களை உருவாக்க வேண்டியவர்கள் என்பதை எப்போது உணர்ந்து கொள்ள வைக்க போகிறோம்? ஒரு படத்தின் ஆரம்பத்தில் குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பதோடு நம் சமூக அக்கறை முடிந்து போகிறதா? குடியால் நாம் இறந்தவர்கள் அதிகம்.


Click it and Unblock the Notifications











