SAC: அப்பாவை வைத்து முதல் படம் இயக்க மாட்டேன்.. எஸ்ஏசி பகிர்ந்த சஞ்சய் முடிவு!
சென்னை: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளது குறித்து தற்போது லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சஞ்சய் சொல்லிய ஸ்கிரிப்ட் பிடித்ததால்தான் அவரை வைத்து படமியக்கும் முடிவை எடுத்ததாக லைகா நிறுவனர் சுபாஷ்கரன் இந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

இதேபோல தன்னுடைய ஸ்கிரிப்டை சுதந்திரமாக உருவாக்க லைகா முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக சஞ்சய்யும் உற்சாகம் தெரிவித்துள்ளார்.
அப்பாவை வைத்து முதல் படம் இயக்கமாட்டேன் என பேரன் கூறியதாக எஸ்ஏசி மகிழ்ச்சி: நடிகர் விஜய் கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார். இவருடைய அப்பா பிரபல இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான பல படங்களில் சிறுவனாக நடித்துள்ளார் விஜய். தொடர்ந்து நாளைய தீர்ப்பு படத்தில் தன்னுடைய அப்பா இயக்கத்திலேயே அறிமுகமானார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய அப்பாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பிலேயே களமிறங்கிய விஜய், சில படங்கள் தாண்டிய பின்பே நடிகராக ஏற்கப்பட்டு, மற்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்க சான்ஸ் பெற்றார்.
இந்நிலையில் விஜய், தற்போது கோலிவுட்டின் மிகப்பெரிய ஹீரோவாக, ஏராளமான ரசிகர்களை கொண்டவராக கொண்டாடப்படுகிறார். அவரது படங்கள் சொதப்பலாகவே இருந்தாலும், அந்தப் படம் வசூல் சாதனை படைத்துவிடும். அந்த அளவிற்கு அதிகமான ஃபேன் பேஸ் கொண்டவராக விஜய் காணப்படுகிறார். இதற்கு சமீபத்திய உதாரணம் பீஸ்ட். நெல்சன் இயக்கத்தில் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் சாதனை படைத்தது.
இந்தப் படத்தை தொடர்ந்து குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு வாரிசு படத்தை கொடுத்த விஜய், தற்போது அதிரடி சரவெடியாக லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடித்துள்ள நிலையில், வரும் அக்டோபர் 19ம் தேதி இந்தப் படத்தின் ரீலீசுக்காக தற்போது முதலே ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அக்டோபர் 5ம் தேதி படத்தின் இசை வெளியீடு நடக்கவுள்ள நிலையில், அடுத்ததாக தளபதி 68 படத்திற்காக வெங்கட் பிரபுவுடன் இணையவுள்ளார் விஜய்.

இதனிடையே விஜய்யின் மகன் ஜேசன் விஜய், தற்போது தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்துள்ளார். முன்னதாக குறும்படம் இயக்கி, தன்னை நிரூபித்த அவர், தற்போது லைகா நிறுவன தயாரிப்பில் புதிய படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார். இதுகுறித்து லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், ஜேசன் சஞ்சய் குறித்து, அவரது தாத்தாவும், விஜய்யின் அப்பாவுமான இயக்குநர் எஸ்ஏசி கொடுத்த பேட்டியொன்று தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவரது பேரன் இயக்குநராகவுள்ளதாக கூறிய நிலையில், உனக்கென்னடா, நீ டைரக்ட் செய்ய நினைத்தால் பெரிய நடிகர் உன் வீட்டிலேயே உள்ளார் என்று தான் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவரை வைத்து எடுத்தால் படம் ஓடிவிடும் என்று தான் கூறிய நிலையில், அதற்கு பதிலளித்த சஞ்சய், இல்லை தாத்தா, விஜய் சேதுபதிதான் தன்னுடைய முதல் ஹீரோ என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளார். தான் இயக்குநராக தன்னை நிரூபித்த பின்பே, அப்பாவை வைத்து படமியக்கும் சஞ்சய்யின் தன்னம்பிக்கையையும் எஸ்ஏசி சுட்டிக் காட்டியுள்ளார். அந்த பேட்டியில் இதுதான் தன்னுடைய ரத்தம் என்றும் சஞ்சய் குறித்தும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











