அதிர்ச்சி.. பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கேயாரின் மனைவி இந்திரா காலமானார்
சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தரான கேயாரின் மனைவி இந்திரா கேயார் காலமானார்.
சிறுநீரக கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 24, 2021) மாலை 4.45 மணிக்கு காலமானார். அவரது வயது 67.
இவர்களுக்கு ஒரு மகனும் 3 மகள்களும் உள்ளனர். கேயார் மனைவி இந்திராவின் இறுதி சடங்கு நாளை (செப்டம்பர் 25, 2021) மாலை 4 மணிக்கு தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.
ஈரமான ரோஜாவே, மாயா பஜார், இரட்டை ரோஜா, அலெக்சாண்டர், காதல் ரோஜாவே உள்ளிட்ட பல படங்களை இயக்கி பிரபலமானவர் கேயார்.
கோதண்ட இராமையா எனும் பெயரை சுருக்கி செல்லமாக திரையுலகினர் இவரை கேயார் என அழைத்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தில்லு முல்லு படத்தை விநியோகம் செய்து விநியோகஸ்தராக அவதாரமெடுத்த கேயார், ரங்கா, தாய் வீடு, அன்புள்ள ரஜினிகாந்த், விக்ரம், புன்னகை மன்னன், குணா, ஐ, பாகுபலி, கேஜிஎஃப் உள்ளிட்ட பல படங்களுக்கு விநியோகஸ்தராக பணியாற்றி உள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவராக, திரைப்பட வர்த்தக சபை, தயாரிப்பாளர்கள் அறக்கட்டளை, விருது குழுக்கள் பலவற்றிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார் கேயார்.
இவரது மனைவி இந்திரா மறைந்த செய்தி அறிந்த திரையுலகினர் பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











