சகாயம் ஐ.ஏ.எஸ்ஸையும் விட்டு வைக்காத 'விசாரணை'
சென்னை: காவல் துறையின் விசாரணை முறைகளை மாற்றியமைக்கக் கூடிய சட்ட திருத்தங்களை உடனடியாக கொண்டு வரவேண்டும் என்று விசாரணை படத்தைப் பார்த்த பின்னர் சகாயம் ஐ.ஏ.எஸ் கூறியிருக்கிறார்.
நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனமும், வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் படம் விசாரணை. பிரபல எழுத்தாளர் எம்.சந்திரசேகரின் லாக் - அப் நாவலை அடிப்படையாக வைத்து விசாரணை உருவாகி இருக்கிறது.
அட்டகத்தி தினேஷ், ஆனந்தி, முருகதாஸ், சமுத்திரக்கனி, கிஷோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசைமயமைத்து இருக்கிறார்.
வெளியாகும் முன்பே பல்வேறு விருதுகளையும் விசாரணை வென்றிருப்பதால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருக்கிறது.
மேலும் நடிகர் கமல்ஹாசன், ரஜினி, இயக்குநர் மணிரத்னம், பிரியதர்ஷன் ஆகியோர் இப்படத்தைப் பார்த்து தங்களது பாராட்டுகளை வெற்றிமாறன் குழுவினருக்கு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இப்படத்தைப் பார்த்த சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் "காவல் துறைக்கு அளிக்கப்பட்டிருக்கும் வரம்பற்ற அதிகாரம் சனநாயகத்துக்கு எதிரானது.
காவல் விசாரணையில் அத்துமீறல்களை மட்டுப்படுத்தும் சீர்திருத்த சட்டங்களே உடனடியாக நமது நாட்டிற்கு தேவை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தற்போது சகாயம் ஐ.ஏ.எஸ்ஸின் இந்த வார்த்தைகளை விளம்பர வடிவில் படக்குழுவினர் பயன்படுத்தி வருகின்றனர்.
நாளை உலகம் முழுவதும் வெளியாகும் விசாரணை பெங்களூர் நாட்கள் மற்றும் சாஹசம் என்னும் வீர செயல் ஆகிய படங்களுக்கு பலத்த போட்டியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றிமாறனின் விசாரணை தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்யுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











