முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கும் கபாலி நடிகை... பூஜையுடன் துவக்கம்
சென்னை : நடிகை சாய் தன்ஷிகா கபாலி படம் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றார்.
தொடர்ந்து படங்களில் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கும் மனோகரி படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது.

நடிகை சாய் தன்ஷிகா
நடிகை சாய் தன்ஷிகா மனதோடு மழைக்காலம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர். தொடர்ந்து பேராண்மை, மாஞ்சா வேலு, அரவான், பரதேசி உள்ளிட்ட தேர்ந்தெடுத்த கதைக்களங்களில் நடித்து அனைவரின் பாராட்டுக்கும் உள்ளானார்.

ரசிகர்களை பெற்றுத்தந்த கபாலி
சூப்பர்ஸ்டாரின் மகளாக இவர் நடித்து வெளியான கபாலி படம் இவருக்கு ரசிகர்களிடையே சிறப்பான அறிமுகத்தை பெற்றுத் தந்தது. தற்போது முதல் முறையாக அவர் இரட்டை வேடங்களில் நடிக்கும் மனோகரி என்ற படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட தயாரிப்பு
இந்தப் படத்தை சூர்யா பிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் மகேஸ்வரன் நந்தகோபால் என்பவர் தயாரிக்கவுள்ளார். இந்தப் படம் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் தன்ஷிகாவுடன் கவிஞர் சினேகனின் மனைவி கன்னிகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

கார்த்திக் ராஜா இசை
மேலும் இளவரசு, ஆதித்யா கதிர், பிஜிலி ரமேஷ் இவர்களுடன் கராத்தே மணியின் மகன் ராஜ்குமார் வில்லனாக நடிக்கவுள்ளார். தெலுங்கில் சில படங்களில் வில்லனாக நடித்துள்ள இவர் தமிழில் இந்தப் படம் மூலம் வில்லனாக அறிமுகமாகிறார். படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கவுள்ளார்.

சென்டிமெண்ட் த்ரில்லர் படம்
படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கவுள்ளார் நவாஸ் அகமது. இந்தப் படத்தில் தன்ஷிகா இதுவரை ஏற்று நடித்திராத கேரக்டரில் நடித்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். செண்டிமெண்ட் கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லராக இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பூஜையுடன் சூட்டிங் ஆரம்பம்
இன்று கம்பத்தில் படத்தின் சூட்டிங் பூஜையுடன் துவங்கியுள்ளது. தொடர்ந்து கொடைக்கானல், திண்டுக்கல்லை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மிகவும் போல்டான கதாபாத்திரங்களில் நடித்துவரும் தன்ஷிகாவிற்கு இந்தப் படம் கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











