சென்னை, ஐதராபாத்தில் திடீர் தியேட்டர் விசிட்.. ரசிகர்கள் ஆரவாரம்.. கண்கலங்கிய கார்கி நாயகி!
சென்னை : நடிகை சாய் பல்லவியின் சிறப்பான படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது இரு தினங்களுக்கு முன்பு வெளியான கார்கி.
இந்தப் படத்தின் ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இயக்குநர் கவுதம் ராமச்சந்திரன் இந்தப் படத்தின்மூலம் தன்னை சிறப்பான இயக்குநராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

நடிகை சாய் பல்லவி
நடிகை சாய் பல்லவி சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது கதைத்தேர்வு மிகவும் சிறப்பாக காணப்படுகிறது. அந்த வகையில் தற்போது கார்கி என்ற படத்தில் அவர் நடித்துள்ளார். இரு தினங்களுக்கு முன்பு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

கார்கி படம்
இந்த ஆண்டின் சிறப்பான படமாக அமைந்துள்ளது கார்கி. வெளியான இரு தினங்களிலேயே இந்தப் படத்திற்கான வரவேற்பு மற்றும் வசூல் மலைக்க வைக்கிறது. அனைவரின் பாராட்டுக்களையும் இந்தப் படம் பெற்று வருகிறது. பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் கதையில்லை என்று கூறி பழைய மாவை அரைப்பவர்களுக்கு இந்தப் படம் சிறப்பான கதையுடன் முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிறப்பான விமர்சனங்கள்
அனைவரும் கண்டிப்பாக இந்தப் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ஒரு சாதாரண குடும்பத்தில் தன்னுடைய குடும்பமே தன்னுடைய வாழ்க்கை என வாழ்ந்துவரும் ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கையை புரட்டிப் போடும் சம்பவம், அதிலிருந்து மீள அவர் செய்யும் போராட்டத்தை மையமாக வைத்து இந்தப் படம் வெளியாகியுள்ளது.

கேரக்டராக வாழ்ந்துள்ள சாய் பல்லவி
படத்தில் கார்கி கேரக்டரில் சாய் பல்லவி வாழ்ந்துள்ளார். அவரது அசத்தலான நடிப்பு கண்டிப்பாக இந்த ஆண்டில் அவருக்கு பல விருதுகளை பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு காட்சியிலும் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தன்னுடைய தந்தையை மீட்க போராடும் மகளாக அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

சாய் பல்லவி திடீர் திரையரங்க விசிட்
இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெற்றதை தொடர்ந்து படம் சிறப்பான வரவேற்பை பெற்றது. திரையரங்குகளில் அதிகமான ரசிகர்கள் இந்தப் படத்தை பார்த்து வருகின்றனர். இதனிடையே படத்தை மேலும் பிரமோட் செய்யும் வகையில் சாய் பல்லவி ஐதராபாத் மற்றும் சென்னை திரையரங்குகளுக்கு திடீர் விசிட் செய்துள்ளார்.

அலைமோதிய ரசிகர்கள்
திரையரங்குகளில் அவரை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டித் தள்ளினர். அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள அலைமோதினர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த திரையரங்க நிர்வாகிகள் திணறியதையும் பார்க்க முடிந்தது. இதனால் சாய் பல்லவி உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார்.

ரசிகர்கள் ஆதரவு
சிறப்பான படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களின் ஆதரவு அதிகமாகவே இருக்கும் என்பதை தொடர்ந்து ரசிகர்கள் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அது பெரிய நடிகரின் படமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதும் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாய் பல்லவியை மட்டுமே நம்பி இந்தப் படம் எடுக்கப்படவில்லை. படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது படத்தின் மிகப்பெரிய பலம்.


Click it and Unblock the Notifications











