சைந்தவிக்கு ஜிவி பிரகாஷ் செய்த ஃபோன்.. ஆச்சரியப்பட்ட மகள்.. இவர்கள் உண்மையில் கிரேட்தான்
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ். அவருக்கும், பின்னணி பாடகி சைந்தவிக்கும் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. பல வருடங்கள் அவர்கள் காதலர்களாக இருந்தார்கள். அந்தத் தம்பதிக்கு அன்வி என்ற மகள் இருக்கும் சூழலில்; சில வருடங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டார்கள். அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்துவிட வேண்டும் என குடும்பத்தினர் எடுத்த அத்தனை முயற்சிகளும் வீணாகிப்போய்விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கோலிவுட்டின் டாப் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். அவர் சினிமாவுக்குள் வந்தபோது டீன் ஏஜில் இருந்தார். ஆனால் இசை பற்றிய அறிவு அவ்வளவு இருந்தது. அதனால் அவர் இசையமைத்த முதல் படத்தின் பாடல்கள் மெகா ஹிட்டாகின. தொடர்ந்து குசேலன், காளை, பொல்லாதவன், கிரீடம், தலைவா, தெய்வ திருமகள், மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், மதராசபட்டினம் என பல படங்களுக்கு இசையமைத்தார். அந்தப் படங்களின் பாடல்களும் பின்னணி இசையும் அட்டகாசமாக இருக்க சரசரவென்று முன்னேறினார்.

இசையமைப்பாளர் டூ நடிகர்: இசையமைப்பில் செம பிஸியாக இருந்த அவர் திடீரென ஹீரோவாக முடிவெடுத்தார். அதன்படி இசையை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு நடிப்பில் முழு கவனம் செலுத்தினார். பாலா, சசி, ராஜீவ் மேனன் என முக்கியமான இயக்குநர்கள் இயக்கத்தில் நடித்தார். இருந்தாலும் பெரிய ஹிட் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கிடையே விட்டால் அப்படியே நடிப்பில் போய்விடுவாரோ என்று அச்சமடைந்த அவரது ரசிகர்கள்; மீண்டும் இசையமைக்க அழைத்தார்கள். அதனை கேட்டு ஜிவியும் இசையமைத்தார். அதன் பலனாக சூரரைப் போற்று, வாத்தி ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகளையும் வாங்கினார்.
பெர்சனல் வாழ்க்கை: ஜிவி பிரகாஷின் பெர்சனல் வாழ்க்கையை பொறுத்தவரை அவரும் பின்னணி பாடகி சைந்தவியும் பள்ளிக்கூடம் படிக்கும்போதிருந்தே காதலித்தார்கள். இரண்டு பேரின் குடும்பத்திலும் இந்தக் காதலுக்கு சம்மதம் கிடைத்ததை தொடர்ந்து கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு அன்வி என்ற மகளும் இருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் தாங்கள் பிரிவதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவித்து விவாகரத்தும் பெற்றுவிட்டார்கள். இருப்பினும் மகளை வளர்ப்பதில் அவர்கள் ஒற்றுமையாகவே செயல்பட்டுவருகிறார்கள்.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் சைந்தவி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டி சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் அளித்த பேட்டியில், "என் மகள் என் வீட்டிலும் இருப்பாள். அவங்க அப்பா வீட்டிலும் இருப்பாள். அவள் என் வீட்டிலிருந்து அங்கே செல்வதற்கு முன்னதாகவே ஃபோன் செய்து, இங்கே என்ன செய்தால் என்பதை அவரிடம் சொல்லிவிடுவேன். அதேமாதிரி அங்கே ஏதாவது வால் தனம் செய்தால் அவர் உடனே எனக்கு ஃபோன் செய்து இப்படி செய்தால் நான் திட்டினேன் என சொல்லிவிடுவார்.
ஆச்சரியப்பட்ட மகள்: மகள் வீட்டுக்கு வந்ததும், 'அப்பா வீட்டில் ஏன் அப்படி செய்தாய்' என கேட்டால்; அவள் உடனே, 'உங்களுக்கு எப்படி தெரியும்?' என ஆச்சரியத்தோடு கேட்பாள். நாங்கள் பேசிக்கொண்டுதான் இருப்போம். நாங்கள் பேசிக்கொள்ளவில்லை என்றால் பிரச்னை வரும். அந்த சூழ்நிலையை மகளுக்கு கொடுக்கக்கூடாது என்பதில் நானும் அவரும் தெளிவாக இருக்கிறோம்" என்றார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ, பிரிந்தாலும் பிள்ளைக்காக ஆரோக்கியமாக பழகிவரும் ஜிவி - சைந்தவி உண்மையிலேயே கிரேட்தான் என வாழ்த்திவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
