எந்த கண்டிஷனையும் ஜிவி பிரகாஷ் கேட்கல.. கல்யாண ஃபோட்டோவை இப்போவும் பார்ப்பேன்.. சைந்தவி ஓபன் டாக்
சென்னை: ஜிவி பிரகாஷும், சைந்தவியும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். தங்களது திருமணத்துக்காக கிட்டத்தட்ட 12 வருடங்கள் காத்திருந்தார்கள். திருமணத்துக்கு பிறகு இணக்கமாக வாழ்ந்துவந்த அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டனர். ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்துகொண்டிருந்த அவர்கள் திடீரென பிரிவை அறிவித்தது ரசிகர்களிடையேயும், திரைத்துறையினரிடமும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகன் என்ற அடையாளத்தோடுதான் வெயில் படத்தில் ஜிவி பிரகாஷை அனைவரும் பார்த்தார்கள். ஆனால் படத்தின் பாடல்களை கேட்ட பிறகு இந்தப் பையனுக்குள் என்னமோ இருக்கு என்று ஜிவியை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். அந்த சின்ன வயதில் ஜிவி வெயிலுக்கு போட்ட இசையை கேட்ட பலரும் ஆச்சரியத்தில் வாயடைத்து போயினர். அதற்கு பிறகு தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்த பிரகாஷ் தமிழின் முன்னணி மற்றும் முக்கியமான இசையமைப்பாளர் என்ற இடத்துக்கு வந்தார்.

நடிகர்: இசையமைப்பாளராக சிறப்பாக சென்றுகொண்டிருந்த ஜிவி பிரகாஷுக்கு திடீரென நடிக்கும் ஆசை வந்தது. அதன்படி டார்லிங் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். படம் சூப்பர் ஹிட்டானது. ஆனால் அதற்கு பிறகு நடித்த சில படங்கல் வரிசையாக தோல்வியை சந்தித்தன. அப்படிப்பட்ட சூழலில் பாலாவின் நாச்சியார் படத்தில் நடித்தார். படம் படுத்துவிட்டாலும் ஜிவி பிரகாஷின் நடிப்பு பாராட்டப்பட்டது. அதற்கு பிறகு அவர் நடித்த சர்வம் தாளமயம், சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டடித்தன.
திருமணம்: இதற்கிடையே பின்னணி பாடகி சைந்தவியை காதலித்தார் ஜிவி பிரகாஷ். இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். சிறு வயதிலிருந்தே இருவருக்கும் காதல் மலர்ந்துவிட்டது. பிறகு வீட்டு சம்மதத்துக்காகவும்; நிலையான ஒரு இடத்தை பிடிப்பதற்காகவும் இரண்டு பேருமே 12 வருடங்கள் தங்களது திருமணத்துக்காக காத்திருந்தார்கள். ஒருவழியாக திருமணம் முடிந்தது. அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்திருக்கிறது.
தாயின் ஆசை: இருவரும் பிரிந்ததற்கு ஜிவி பிரகாஷ் நடிக்க ஆரம்பித்தது மட்டுமின்றி நெருக்கமான காட்சிகளில் நடித்ததுதான் என்று பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் உண்மையான காரணம் என்னவென்று அவர்களுக்குத்தான் தெரியும். மேலும் ஜிவி - சைந்தவி பிரிவதற்கு ஜிவியின் தாய் ரெஹானாதான் காரணம் என்று கொளுத்திப்போட்டார்கள் சிலர். ஆனால் அதில் உண்மை இல்லை என்றும்; சைந்தவி நல்ல பெண். அவர் மீண்டும் வீட்டுக்கு வர வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்று ரெஹானா கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.
சைந்தவி பேட்டி: இந்நிலையில் சைந்தவியின் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் திடீரென ட்ரெண்டாகியுள்ளது. விவாகரத்து ஆவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், "திருமண நாள் என்றாலே அனைத்துமே நியாபகத்துக்கு வரும். ஏனெனில் நாங்கள் எங்கள் திருமணத்துக்காக 12 வருடங்கள் காத்திருந்தோம். இப்போதுகூட எங்களது திருமண புகைப்படங்களை எடுத்து பார்த்துக்கொண்டிருப்பேன். அவர் உடனே, அதை ஏன் இவ்வளவு தடவை பார்த்துட்டே இருக்க என்று கேட்பார்.
கண்டிஷனை கேட்கவில்லை: நான் அதற்கு, 'நான் அந்த தருணத்தில் மீண்டும் வாழ்கிறேன்' என்று பதில் சொல்வேன். அவர் என்னிடம் வந்து நடிக்கப்போகிறேன் என்று சொன்னதும் நான் சில கண்டிஷன்களை போடத்தான் செய்தேன். ஆனால் அவர் அதில் எதையுமே கேட்கவில்லை என்பது தனிக்கதை. நெருக்கமான காட்சிகளை முதலில் பார்த்தபோது கொஞ்சம் ஒருமாதிரித்தான் இருந்தது. ஆனால் திருமணமான மற்ற நடிகர்களின் மனைவிகளும் தங்களது கணவரை இப்படித்தானே பார்ப்பார்கள் என்று சமாதானம் செய்துகொண்டேன்' என்றார்.


Click it and Unblock the Notifications











