Salaar Box Office: ப்பா.. 2 நாளில் 300 கோடியை நெருங்கிய சலார் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
ஹைதராபாத்: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான சலார் திரைப்படம் 2 நாட்களில் 300 கோடி வசூலை நெருங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு அதிர வைத்துள்ளனர். ஷாருக்கானின் டங்கி படத்துடன் மோதிய சலார் இப்படியொரு வசூல் வேட்டை நடத்தியிருப்பது பெரும் ஆச்சர்யத்தை அளித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்களே கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கான்சார் எனும் தனி ராஜ்யத்தையே பிரபாஸுக்காக உருவாக்கியுள்ள இயக்குநர் பிரசாந்த் நீல். கே ஜி எஃப் 2 திரைப்படம் எந்த அளவுக்கு பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியது அதைவிட வேகமாக சலார் திரைப்படம் வசூல் வேட்டை ஆடி வருகிறது. இந்த ஆண்டு ஷாருக்கானின் பதான் மற்றும் ஜவான் உள்ளிட்ட படங்கள் 1000 கோடி வசூலை தாண்டிய நிலையில் சமீபத்தில் வெளியான அனிமல் திரைப்படம் 1000 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இந்நிலையில், ஆண்டு இறுதியில் இன்னொரு 1000 கோடி வசூல் படமாக சலார் மாறப்போகிறது.

படையெடுத்த பிரபாஸ் ரசிகர்கள்: சலார் படத்தின் முதல் பாகம் நல்லாவே இல்லை என்றும் அந்த படத்தின் கதை ரொம்பவே சொதப்பலாக உள்ளதாக ஏகப்பட்ட விமர்சனங்கள் கிளம்பிய நிலையிலும், இந்த முறை பிரபாஸை விட்டு விடக்கூடாது என டார்லிங் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக பாகுபலி படத்தை எப்படி தியேட்டருக்கு சென்று பார்த்தார்களோ அதேபோல சலார் படத்தையும் தியேட்டருக்கு சென்று அதிக அளவில் பார்த்து வருவதாக கூறுகின்றனர்.
அம்மாவின் அஸ்தியை கரைக்க இந்தியா வரும் ஸ்ருதிஹாசனை காப்பாற்ற பிரபாஸ் ஒருவரால் மட்டும் தான் முடியும் என்கிற நிலையில், மைம் கோபி பிரபாஸிடம் ஸ்ருதிஹாசனை ஒப்படைக்கிறார். எந்த வம்பு தும்புக்கும் போகாமல் அம்மா பேச்சை கேட்டுக்கொண்டு பிரபாஸ் அமைதியாக இருக்கும் நிலையில், ஸ்ருதிஹாசனை தேடிக்கொண்டு வரும் நபர்களை அம்மாவின் உத்தரவோடு அடித்து துவம்சம் செய்கிறார்.
சலார் கதை புடிச்சிருக்கா?: ஒரு கட்டத்தில் அதுவே பிரபாஸுக்கும் பிரித்திவிராஜ்க்கும் இடையிலான மோதலை உருவாக்கி விடுகிறது. கான்சார் சீலை உருவாக்கியதே பிரபாஸ் தான் என்றும் அந்த சீலை அவரே உடைத்த நிலையில், அதற்கான மரண தண்டனையை பிரபாஸ் அடைந்தே தீர வேண்டும் என பிரித்திவிராஜ் பேசும் வசனங்கள் எல்லாம் ரசிகர்களை மலைக்க வைத்தது.
தனது நண்பன் பிரித்திவிராஜுக்காக ஒட்டுமொத்த கான்சார் ராஜ்யத்தையும் பல பேரை பலி கொடுத்து பெற்றுத்தந்ததே பிரபாஸ் தான் என்பது ஸ்ருதிஹாசனுக்கு மைம் கோபி கதையாக சொல்ல ரசிகர்களுக்கும் அது கடத்தப்படுகிறது. முதல் பாதியின் முடிவில் பிருத்விராஜுக்காக பிரபாஸ் சண்டையிடுவது உடன் படம் முடிவடைகிறது.
இரண்டாம் பாதியில் தான் பிருத்விராஜை பிரபாஸ் எப்படி அரசன் ஆக்குகிறார். இருவருக்கும் பகை எப்படி உண்டாகிறது என்பதெல்லாம் தெரியவரும். பிரம்மாண்டமான கதையம்சம் கொண்ட படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கிய நிலையில், படத்தை மக்கள் தியேட்டரில் தான் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்துடன் தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகின்றன.
2ம் நாள் வசூல்: முதல் நாளில் பிரபாஸின் சலார் திரைப்படம் 178.5 கோடி ரூபாயை வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் இரண்டாம் நாள் 250 கோடி தான் வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்களை குறைவான தொகையை சுட்டிக் காட்டிய நிலையில், தற்போது அதெல்லாம் கிடையாது. 2ம் நாள் வசூல் 295.5 கோடி ரூபாய் என தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 300 கோடி ரூபாய்க்கு வெறும் 4.5 கோடி தான் குறைவு.
ஞாயிற்றுக்கிழமையான இன்றைய வசூல் உடன் சேர்த்தால் 450 கோடி ரூபாயை சலார் படம் தாண்டி விடும் என்றே தெரிகிறது. கிறிஸ்துமஸ் விடுமுறையுடன் ஜெயிலர் மற்றும் லியோ வசூலை அடித்து நொறுக்கிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











