ICUவில் சல்மான் கானின் அப்பா.. மருத்துவமனைக்கு விரைந்த ஷாரூக் கான்.. உடல்நிலை எப்படி இருக்கு?
மும்பை: இந்தி சினிமாவில் மூத்த திரைக்கதை எழுத்தாளராகவும், ஒரு காலத்தில் முன்னணி நடிகராகவும் வலம் வந்தவர் சலீம் கான். இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் தந்தை . 90 வயதான சலீம் கான், ஜாவேத் அக்தருடன் இணைந்து ஷோலே, தீவார், சஞ்சீர் போன்ற பல மெகா ஹிட் படங்களுக்குத் திரைக்கதை எழுதியவர். இவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு தற்போது இந்தி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி, சலீம் கானுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதையடுத்து, அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையான லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு திடீரென வலிப்பு மற்றும் ரத்த அழுத்தம் அதிகரித்ததால், நிலைமை மோசமாவதை தவிர்க்க மருத்துவர்கள் அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தி உள்ளனர். இது சல்மான் கான் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 90 வயதான மூத்த கலைஞர் என்பதால், அவரது உடல்நிலை குறித்த கவலைகள் அதிகரித்தன.
இந்நிலையில், சலீம் கானின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நேரில் வந்திருந்தது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஷாருக்கான் தனது காரில் லீலாவதி மருத்துவமனைக்கு வந்து இறங்கும் வீடியோவை ஏ.என்.ஐ (ANI) செய்தி நிறுவனம் வெளியிட்டது. சல்மான் கானுக்கும் ஷாருக்கானுக்கும் இடையே இருக்கும் ஆழமான நட்பையும், மூத்த கலைஞர்கள் மீது ஷாருக்கான் வைத்துள்ள மரியாதையையும் பார்த்து இணையதளவாசிகள் பலரும் பாராட்டி வருகின்றனர். "சலீம் கான் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும்" என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

தற்போதை உடல்நிலை: சலீம் கானின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர் ஜலீல் பார்க்கர் கூறுகையில், "அவருக்கு வென்டிலேட்டர் சப்போர்ட் கொடுக்கப்பட்டது உண்மைதான். ஆனால் தற்போது அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை, உடல்நிலை சீராக உள்ளது" என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், வயது முதிர்வு காரணமாக அவர் பழைய நிலைக்கு திரும்ப சற்று கூடுதல் காலம் எடுக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
கோபத்தில் சல்மான் கான் குடும்பம்: இதற்கிடையில், சலீம் கானின் மருத்துவத் தகவல்கள் ஊடகங்களுக்குக் கசிந்தது சல்மான் கான் குடும்பத்தினரிடையே கடும் கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. "உடல் நலம் என்பது முற்றிலும் ஒருவரின் தனிப்பட்ட விஷயம். குடும்பத்தினர் அனுமதி இல்லாமல் மருத்துவமனை ஊழியர்களோ அல்லது நிர்வாகமோ எந்தத் தகவலையும் ஊடகங்களுடன் பகிரக் கூடாது" என 'வெரைட்டி இந்தியா'விடம் குடும்பத் தரப்பு கறாராக தெரிவித்துள்ளது.
வேண்டுதல்: மேலும், இனி வரும் காலங்களில் சலீம் கான் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் எந்த அறிக்கையும் வெளியிட வேண்டாம் என்றும், தேவையான தகவல்களைத் தாங்களே அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்றும் சல்மான் கான் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இந்தியத் திரையுலகின் ஒரு சகாப்தமாகத் திகழும் சலீம் கான், பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்பதே ஒட்டுமொத்தப் பாலிவுட்டின் தற்போதைய பிரார்த்தனையாக உள்ளது. அதே நேரத்தில் ஷாரூக் கான் வந்து நலம் விசாரித்து சென்றது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications