மனிதனைக் கொன்ற வழக்கில் தப்பி, மான் வேட்டை வழக்கில் சிக்கிய சல்மான்!
மும்பை: சல்மான் கானும் சர்ச்சைகளும் ஒட்டிப் பிறந்த சமாச்சாரங்கள். எப்போதும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் அவர், சமீப காலமாகத்தான் அமைதியாக இருந்தார். அவர் படங்களும் அடுத்தடுத்து பெரிய ஹிட்டடித்துக் கொண்டிருந்தன.
சல்மான் கான் மான் வேட்டை வழக்கில் 1998-ம் ஆண்டு சிக்கினார். அவருடன் தபு, நீலம், சோனாலி பிந்தரே மற்றும் சயீப் அலிகானும் சிக்கினர்.

இந்த மான்வேட்டை வழக்கில் அவர் சிக்கிய 4 ஆண்டுகள் கழித்து குடித்துவிட்டு காரை ஓட்டி ஒருவரைக் கொன்ற வழக்கில் சிக்கினார்.
அது 2002-ம் ஆண்டு. ஒரு செப்டம்பர் மாத இரவில் நன்கு குடித்துவிட்டு தனது காஸ்ட்லியான லேண்ட் க்ரூய்ஸ் காரில் வந்த சல்மான், பாந்த்ரா அருகே ப்ளாட்பாரத்தில் வண்டியை விட்டார். அங்கு படுத்து தூங்கிக் கொண்டிருந்த வீடற்ற ஏழை ஒருவர் இந்த கோரவிபத்தில் பலியானார். மேலும் நான்கு பேர் பலத்த காயமடைந்தனர்.
இந்த வழக்கில் சல்மான்கானை செப்டம்பர் 28, 2002-ம் தேதி போலீசார் கைது செய்தனர். தனது வக்கீல் வீட்டில் பதுங்கிக் கொண்டிருந்தார் சல்மான் கான். பின்னர் 13 ஆண்டுகள் வழக்கு நடந்தது. இந்த வழக்கில் முதலில் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்தது நீதிமன்றம். ஆனால் அடுத்த 48 மணி நேரத்தில் ஜாமினில் வெளியில் வந்தார் சல்மான். இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி கடந்த 2015-ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றம் சல்மான் கானை விடுதலை செய்தது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்த வழக்கிலிருந்து விடுதலையாகி மூன்றாண்டுகள் கழிந்த நிலையில், இப்போது மானை வேட்டை ஆடிய வழக்கில் சிறைத் தண்டனைப் பெற்றுள்ளார் சல்மான்கான். இதிலும் 5 ஆண்டுகள்தான் தண்டனை. தண்டனையை அனுபவிப்பாரா... அல்லது முன்பு போலவே 48 மணி நேரத்தில் விடுதலையாவாரா... பார்க்கலாம்!


Click it and Unblock the Notifications











