பிரம்மாண்டத்தின் உச்சிக்கே செல்லும் ஷங்கர்.. ராம்சரண் படத்தில் சல்மான் கானை களமிறக்க போகிறாரா?
சென்னை: இந்தியன் 2ம் பாகம் கிடப்பில் கிடக்கும் நிலையில், அடுத்ததாக ராம்சரணை வைத்து புதிய படத்தை ஆரம்பிக்க உள்ளார் ஷங்கர்.
கோலிவுட் ஹீரோக்கள் இல்லாமல், டோலிவுட் ஹீரோவை வைத்து படம் இயக்கப் போகிறார் ஷங்கர் என்பது தொடர்பான விமர்சனங்கள் ஒரு பக்கத்தில் இருந்து வரும் நிலையில், அந்த படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகரும் இணையப் போவதாக அட்டகாசமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அது மட்டும் நிஜமானால், ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்டமான படைப்பாக ஷங்கரின் அடுத்த படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிடப்பில் இந்தியன் 2
லைகா நிறுவனத்துக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் இடையே என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை. கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் இருந்து நைசாக நழுவிய நிலையில், இயக்குநர் ஷங்கரும் ஆளவிடுங்கடா சாமி என டோலிவுட் ஹீரோ ராம்சரணை வைத்து படம் இயக்க முடிவு செய்து விட்டார்.

நிக்காத வழக்கு
இயக்குநர் ஷங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளோம். மொத்த தொகையையும் கொடுக்க தயார், ஆனால், இந்தியன் 2வை முடித்துக் கொடுக்காமல் ராம்சரண் படத்தை தொடக் கூடாது என லைகா தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

எகிறும் மவுசு
ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நாயகனாக நடித்து வரும் ராம்சரண் அடுத்து ஷங்கர் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்றதுமே அவரது மவுசு வேற லெவலில் எகிறி வருகிறது. ராஜமெளலி படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன் நடித்து வரும் நிலையில், ஷங்கர் இயக்க உள்ள இதிகாச படத்திலும் பெரிய பாலிவுட் நடிகரை களமிறக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

அப்பாவும் இருக்காரு
சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தில் ராம்சரண் முக்கிய ரோலில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக ராம்சரண் - ஷங்கர் கூட்டணியில் உருவாக உள்ள பிரம்மாண்ட படத்தில் சிரஞ்சீவியும் முக்கிய ரோலில் நடிக்கப் போவதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

சல்மான் கான்
நாளுக்கு நாள் படத்தின் பிரம்மாண்டம் அதிகரித்து சென்று கொண்டே போகும் நிலையில், தற்போது பாலிவுட்டின் முன்னணி கான் நடிகரான சல்மான் கானையும் இந்த படத்தில் நடிக்க வைக்க ஷங்கர் தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அதிரடியான தகவல் ஒன்று வெளியாகி சினிமா உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அதிகாரப்பூர்வ தகவல்
மேலும், இந்த படத்தில் நாயகியாக கியாரா அத்வானி நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆர்.ஆர்.ஆர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஷங்கர் - ராம்சரண் படத்தின் பூஜை விரைவில் போடப்படும் என்றும், படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ ஆன்போர்ட் தகவல்களும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாகுபலியை மிஞ்ச
இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி மற்றும் ஆமீர்கானின் தங்கல் தான் இந்தியளவில் மிகபெரிய வசூல் வேட்டையை நடத்தி உள்ளன. ஆர்.ஆர்.ஆர் படம் அந்த வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கும் நிலையில், ஷங்கரின் அடுத்த படம் எல்லா பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை முறியடிக்க போகிறது என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











