ஆக்ஸிஜன் இன்றி யாரும் சாகக் கூடாது.. இலவசமாக 500 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கும் சல்மான் கான்!
மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 500 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை ஏற்பாடு செய்துள்ளார்.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக உலக நாடுகளை விட இந்தியா அதிகளவில் பாதிப்பை சந்தித்துள்ளது.
நாள்தோறும் சுமார் 4 ஆயிரம் மக்கள் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழக்கும் சோகம் நாட்டையே உலுக்கி வருகிறது.

மருத்துவ வசதி இல்லை
140 கோடி இந்தியர்கள் இருக்கும் நாட்டில் கொரோனாவால் இதுவரை 2.5 கோடி மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை காப்பாற்றக் கூட உரிய மருத்துவ வசதி இல்லாத நாடாக இந்தியா இருப்பதை பார்த்து கொரோனாவால் சொந்தங்களை பறிகொடுத்து வரும் மக்கள் கோபத்தில் உள்ளனர்.

முன்களப் பணியாளர்களாக
தங்கள் ரசிகர்கள் கொரோனாவால் உயிரிழக்கும் கொடுமையை வெறுமனே டிவியில் பார்த்துக் கொண்டு, அது சரியில்லை இது சரியில்லை என ட்வீட்களை போட்டுக் கொண்டு இல்லாமல், களத்தில் இறங்கி முன்களப் பணியாளர்களாக ஏகப்பட்ட பாலிவுட் நடிகர்கள் பணியாற்றி பாராட்டுக்களை பெற்று வருகின்றனர்.

சல்மான் கான் சேவை
பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான நடிகர் சல்மான் கான் தொடர்ந்து கொரோனா போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். பாலிவுட் சினிமா உலகில் தொழிலாளர்களாக பணியாற்றி வரும் 35 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தலா 1,500 ரூபாய் உதவித் தொகை வழங்கி உள்ளார்.

அன்னதானம்
அதுமட்டுமின்றி கொரோனா பரவலை தடுக்க லாக்டவுன் போடப்பட்டுள்ள நிலையில், உணவின்றி பசியால் யாரும் வாடி விடக் கூடாது என உணவு வழங்கும் சேவைகளையும் தனது ரசிகர்கள் மூலமாகவும், தனது தொண்டு நிறுவனத்தின் மூலமாகவும் செய்து அசத்தி வருகிறார்.

500 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்
கொரோனா பாதிப்பை விட அதை குணப்படுத்த சரியான மருத்துவ வசதிகள், படுக்கைகள் இன்றியே பலரும் மடிவதை கண்டு மனமுடைந்து போயுள்ள பாலிவுட் பிரபலங்கள் தொடர்ந்து மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் முயற்சியிலும், தங்களால் முடிந்த மருத்துவ உபகரணங்களை வழங்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சல்மான் கான் Oxygen Concentrators என சொல்லப்படும் 500 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இலவசமாக
முதல் தவணையாக 500 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மும்பைக்கு வந்துள்ளது என்றும், கொரோனா நோயாளிகள் 8451869785 என்கிற எண்ணுக்கு போன் பண்ணியும் மெசேஜ் செய்தும் தங்களின் தேவையை கூறினால், இலவசமாக ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ பாபா சித்திக் மற்றும் ஜீசன் சித்திக் உடன் இணைந்து தனது தொண்டு நிறுவனத்தின் மூலமாக இந்த சேவையை சல்மான் கான் ஆரம்பித்துள்ளார்.

ராதே நடிகருக்கு பாராட்டு
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியான சல்மான் கானின் ராதே திரைப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாக வழக்கம் போல நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மக்களுக்காக சல்மான் கான் செய்யும் இந்த பேருதவியை அறிந்த பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். சல்மான் கானின் ரசிகர்கள் அவரை கடவுளாகவே கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











