ஜெயிக்கணும்னு ஓடிக்கிட்டே இருந்தேன்.. ஆனா அப்புறம் தான் புரிஞ்சது.. உடைத்துப் பேசிய நடிகை சமந்தா!
சென்னை: தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சமந்தா, தன் அசாத்திய உழைப்பால் பல ஏற்ற இறக்கங்களைக் கடந்து இன்றும் ரசிகர்களின் ஃபேவரிட் குயினாக வலம் வருகிறார். தற்போது அவர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள 'மா இண்டி பங்காரம்' திரைப்படம், தமிழில் 'எங்கள் தங்கம்' என்ற பெயரில் வரும் ஜூன் 19-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள நிலையில், இதன் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சமந்தா, சினிமாத் துறை மற்றும் தனது கேரியர் குறித்து பகிர்ந்துள்ளார்.
எல்லைக்கோடே இல்லை: முன்பெல்லாம் சினிமா என்பது ஒரு ஓட்டப்பந்தயப் போட்டி என்று தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும், அந்தப் போட்டியின் இறுதிவரை சென்று எப்படியாவது வெற்றிக் கோட்டைத் தொட்டுவிட வேண்டும் என்றுதான் எப்போதும் நினைப்பேன்; அதற்காக ஓடினேன். ஆனால், காலப்போக்கில் எனக்குள் ஏற்பட்ட முதிர்ச்சியால் தான் ஒரு விஷயத்தை உணர்ந்து கொண்டேன். உண்மையில், இங்கே அப்படி ஒரு பந்தயமே கிடையாது. நாம் ஓடிச் சென்று பிடிக்க வேண்டிய எல்லைக்கோடு என்பதே இங்கு இல்லை என்பதை மிகத் தாமதமாகத்தான் நான் புரிந்து கொண்டேன் என்றார்.

'எங்கள் தங்கம்' : ஜூன் 19 ந் தேதி எங்கள் தங்கம் படம் சமந்தாவுக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று. ஏனெனில், இத்திரைப்படத்தைச் சமந்தா தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். 'தி ஃபேமிலி மேன்' தொடர் புகழ் ராஜ் மற்றும் டி.கே கதையை உருவாக்கியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமந்தாவுடன் இணைந்து ஸ்ரீமுகி, கௌதமி, ஆனந்த் லட்சுமி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரையுலகில் நிலவும் கடுமையான போட்டி, நம்பர் 1 இடத்திற்கான ஓட்டம் ஆகியவற்றைத் தாண்டி, தனக்குப் பிடித்தமான நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதும், அதில் ஆத்மதிருப்தி அடைவதுமே முக்கியம் என்பதைச் சமந்தா தனது பேச்சின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications