உயர்ந்த சக்தி உங்களை பார்த்துக்கொண்டிருக்கிறது.. வினேஷ் போகத்துக்காக குரல் கொடுத்த சமந்தா
சென்னை: இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இன்று தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். 50 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் அரையிறுதியில் வென்று இறுதிச்சுற்றுக்கு சென்றவர் இப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அவரது உடல் எடையில் நூறு கிராம் கூடிவிட்டதாக சொல்லி தகுதி நீக்கம் செய்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் அவருக்கு ஆதரவாக கோலிவுட்டிலிருந்து முதல் ஆளாக குரல் கொடுத்திருக்கிறார் சமந்தா.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 கோலாகலமாக நடந்துவருகிறது. இந்தியாவுக்கு பெரிதாக பதக்கங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. தற்போதைய நிலவரப்படி மூன்று பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 63ஆவது இடத்தில் இருக்கிறது. அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. சூழல் இப்படி இருக்க மல்யுத்த போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கமோ இல்லை வெள்ளி பதக்கமோ கிடைக்கக்கூடிய சூழ்நிலை ஒன்று உருவாகியிருந்தது. இதனால் இந்தியர்கள் அனைவருமே மகிழ்ச்சியில் இருந்தார்கள்.

வினேஷ் போகத்: அதாவது இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடை பிரிவில் அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். முக்கியமாக இரண்டு முறை தங்கப் பதக்கம் வென்ற கியூபா நாட்டை சேர்ந்த குஸ்மானை அரையிறுதியில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றிருந்தார் வினேஷ் போகத். எனவே நிச்சயம் தங்கப் பதக்கம் உறுதி என்று நம்பியிருந்தார்கள் இந்திய மக்கள்.
தகுதி நீக்கம்: இன்று இறுதிப்போட்டி நடப்பதாக இருந்தது. எப்படியாவது தங்கத்தை தட்டி தூக்கிவிட வேண்டும் என்று கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார் போகத். ஆனால் குறிப்பிட்ட எடையைவிட 100 கிராம் அதிகம் இருப்பதாக சொல்லி வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. முக்கியமாக பிரதமர் நரேந்திர மோடி மீது பலரும் தங்களது விமர்சனத்தை முன்வைத்துவருகிறார்கள்.
போராட்டம்: அதாவது கடந்த வருடம் இந்திய மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் வீதிகளில் இறங்கி போராடினார்கள். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பாஜகவை சேர்ந்த எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாக சொல்லி கிட்டத்தட்ட ஒரு மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் பிரதமர் மோடியோ, மத்திய அரசு தரப்பிலிருந்து வேறு யாரோ அவர்களை சந்தித்துக்கூட பேசவில்லை. ஒருவேளை வினேஷ் போகத் இந்த முறை பதக்கம் வென்றால் அது தங்களுக்கு சங்கடமாகிவிடும் என்று திட்டமிட்டு அரசியல் செய்துதான் ஆளும் பாஜக அரசு இப்படி ஒரு வேலையை செய்திருப்பதாக சமூக வலைதளங்கள் முழுவதும் பதிவுகளை பார்க்க முடிகிறது.
சமந்தா ஆதரவு: மேலும் வினேஷுக்கு ஆதரவாக ட்விட்டரில் ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகியுள்ளது. இந்நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில், "சில நேரங்களில் நெகிழ்ச்சியான நபர்கள் கடினமான தடைகளை எதிர்கொள்கிறார்கள். வினேஷ் நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு உயர்ந்த சக்தி உங்களை பார்த்துக்கொண்டிருக்கிறது. சிரமங்களுக்கு மத்தியிலும் நிலைத்து நிற்கும் உங்களின் அசாத்திய திறமை உண்மையிலேயே போற்றுதலுக்குரியது. உங்களது உயர்வு, தாழ்வு என அனைத்திலும் நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications