தாங்க முடியாத அந்த வலியை விவரிக்க முடியாது.. தற்கொலை செய்துகொண்ட டிவி நடிகர் உருக்கமான போஸ்ட்!
மும்பை: தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்ட பிரபல டிவி நடிகர், மன ஆரோக்கியம் பற்றி பேசியுள்ளார்.
பிரபல இந்தி சின்னத்திரை நடிகர் சமீர் சர்மா தற்கொலை செய்துகொண்டது இன்று தெரிய வந்தது.
இவர், கஹானி கர் கர் கி, கியூன்கி சாஸ் பி கபி பாகு தி, ஏ ரிஸ்தே ஹெய்ன் பியார் கே உட்பட பல தொடர்களில் நடித்துள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்பு
கரண் ஜோஹர் தயாரித்த ஹசி து பாசி என்ற படத்திலும் ஷாரூக் கான் தயாரித்திருந்த Ittefaq என்ற படத்திலும் துணை நடிகராக நடித்திருந்தார். நடிப்பை தவிர மாடலிங்கிலும் ஈடுபட்டு வந்த சமீர், மும்பை மலாடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். அவரது வீடு கடந்த 2 நாட்களாக பூட்டியே கிடந்துள்ளது. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பின் செக்யூரிட்டி அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் தெரிவித்துள்ளார்.

தூக்கில் தொங்கினார்
சந்தேகமடைந்த அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது சமீர் சர்மா தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. அவர் உடலை மீட்ட போலீசார், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்துகொண்ட சமீருக்கு வயது 44. அவர் இரண்டு நாட்களுக்கு முன்பே தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பாலிவுட் சோகம்
தற்கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சமீர் கடந்த பிப்ரவரி மாதம்தான் வந்துள்ளார். அடுத்த மாதத்தில் இருந்து லாக்டவுன் பிறப்பிக்கபட்டது குறிப்பிடத்தக்கது. இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து பாலிவுட் இன்னும் மீளாத நிலையில், இவரும் தற்கொலை செய்திருப்பது இந்தி சின்னத்திரை மற்றும் சினிமா உலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோழை அல்ல
சினிமா பிரபலங்கள் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் மறைந்த போது சமீர் தனது, சமூக வலைதளப்பக்கத்தில் மன ஆரோக்கியம் பற்றி பேசியுள்ளார். அதில், 'ஒருவர் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வதன் அர்த்தம் உங்களுக்குப் புரிகிறதா? அது பற்றி கற்பனை செய்ய வேண்டாம். உடனே கோழை என்று அர்த்தப்படுத்தி விடாதீர்கள்.

விவரிக்க முடியாது
ஆனால், அவர் ஏன் அந்த முடிவை எடுக்கிறார்? சமூக, பொருளாதார அல்லது வேறு எந்த அழுத்தமும் காரணமல்ல. ஆனால் அந்த முடிவை எடுக்கிறார். ஏனென்றால் அந்த பிசாசு கத்திக் கொண்டிருப்பதை நிறுத்தவில்லை. அந்த அலறல் தாங்க முடியாத வலியை ஏற்படுத்துகிறது. அந்த வலியை முற்றிலும் விவரிக்க முடியாது என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











