Samuthirakani: சீரியலில் நடிக்கும்போது ஒரு நடிகர் என்னை மிதிமிதினு மிதிச்சாரு.. சமுத்திரக்கனி ஓபன்!
சென்னை: தமிழ் திரையுலகில் வெகு சில நடிகர்கள் மட்டுமே, திறமையோடு சமூக பொறுப்பும் அக்கறையும் கொண்ட நடிகர்களாக உள்ளார்கள். அவர்களில் சமுத்திரக்கனிக்கு எப்போதும் இடம் உள்ளது. அதேநேரத்தில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் காலடி எடுத்துவைத்து, இன்றைக்கு தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் முக்கியமான நடிகராக வளர்ந்துள்ளார். பெரும்பாலும், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் சமுத்திரக்கனி, கதாநாயகனாக எதாவது படத்தில் நடிக்கின்றார் என்றால், அந்தப் படத்தின் கதை கட்டாயம் ஒரு சமூகப்பொறுப்புணர்வு கொண்ட படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். இவரது நடிப்பில் வரும் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் திரு. மாணிக்கம். இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, தான் சீரியலில் தனது வாழ்க்கையைத் தொடங்கும்போது ஒரு நடிகர் தன்னை மிதிமிதி என மிதித்தார் என மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமுத்திரக்கனி, நாசர், வடிவுக்கரசி, பாரதிராஜா, தம்பி ராமையா, கருணாகரன், அனன்யா உள்ளிட்டோர் நடித்து, இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம், திரு.மாணிக்கம். இந்தப் படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது சமுத்திரக்கனி பேசுகையில், தனது ஆரம்பகால சின்னத்திரை அனுபவம் குறித்துப் பேசினார். இது தொடர்பாக அவர் பேசியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சின்னத்திரையில் தனது தொடக்க காலத்தில், தன்னை ஒரு நடிகர், மிதிமிதியென மிதித்தார் எனக் கூறியுள்ளார்.

சமுத்திரக்கனி: அதாவது, சமுத்திரக்கனி தனது திரை வாழ்க்கையை சின்னத்திரையில் இருந்து தொடங்கியவர். இது தொடர்பாக அவர் பேசும்போது, " நான் முதலில் ஒரு சீரியலில் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கப் போயிருந்தேன். அப்போது நான் மிகவும் ஒல்லியாக இருப்பேன். அந்தக் காட்சியில், நாடகத்தில் நடிக்கும் ஒரு நடிகர் என்னை உதைக்கவேண்டும். ஆனால், அந்த இயக்குநர் என்ன நினைத்தாருனு தெரியல, அந்த நடிகரைக் கூப்பிட்டு, இப்போது நீ, அவனை உதைக்கின்ற மாதிரி ஒரு சீன். நீ உதைக்கின்ற உதையில் அவன் வெளியே போய் விழனும். அதன் பின்னர், அவனுக்கு சினிமா ஆசை எப்போதும் வரக்கூடாது, சினிமாவை எப்போதும் நினைத்துப் பார்க்ககூடாது" எனக் கூறினார்.

மிதி: இயக்குநரின் பேச்சைக் கேட்ட அந்த நடிகரும், என்னை மிதிமிதியென மிதித்தார். இன்னும் சொல்லப்போனால், அந்த சீன்ல நான் பலமுறை மிதி வாங்கினேன். ஆனால், அந்த இயக்குநர் கூறியதைப்போல் நான், எனது சினிமாக் கனவை விடவேயில்லை. அதன் பின்னர், அந்த இயக்குநரிடமே ரொம்பநாள் வேலை பார்த்தேன். அவர் என்னை விடவேயில்லை. என்னை மிதிமிதினு மிதித்த அந்த நடிகர் இப்போதும் என்னைப் பார்த்தால், மன்னிப்புக் கேட்பார். அன்னை நான் வாங்கிய மிதியினால்தான் இன்றைக்கு சினிமாவில், நடிகராக, இயக்குநராக வளர்ந்து நிற்கின்றேன்.நேர்மையும் உழைப்பையும் மட்டுமே நம்பி சினிமாவில் எனது பயணத்தை தொடங்கியவன், இன்றைக்கும் அப்படித்தான் இருக்கின்றேன்" எனப் பேசினார்.

அதிர்ச்சி: சமுத்திரக்கனியின் இந்தப் பேச்சு, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, சின்னத்திரையோ வெள்ளித்திரையோ, ஒருவர் பார்ப்பற்கு எளக்காரமாக இருந்தால், அவர்களை அனைத்து துறையிலும், ஒடுக்கத்தான் பார்க்கின்றார்கள். அவர்களின் திறமையை தனித்தன்மையை தெரிந்துகொள்ள யாருக்குமே விருப்பமோ எண்ணமோ வருவதில்லை எனப் பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











