புதியவர்களுடன் இணைந்து பயணிக்க கற்றுக் கொள்ள வேண்டும் - சமுத்திரக்கனி
புதியவர்களை வரவேற்க வேண்டும். அவர்களுடன் இணைந்து பயணிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி.
தமிழ் சினிமாவில் முக்கிய கலைஞராகத் திகழ்பவர் சமுத்திரக்கனி. இயக்குநராக, நடிகராக, தயாரிப்பாளராக ஒரு ஆரோக்கிய சினிமாவை முன்னெடுத்துச் செல்லும் துடிப்பான படைப்பாளி.
அவர் தற்போது இயக்கி வரும கிட்ணா மீது மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது, நல்ல சினிமா விரும்பிகளிடம்.
சமுத்திரக்கனி தன் திரைப்பயணத்தை எப்போதோ ஆரம்பித்துவிட்டார். ஆனால் அவருக்கான வெற்றி நாடோடிகள் படத்துக்குப் பிறகுதான் வசப்பட்டது. இரண்டு தசாப்தங்களாகப் பயணப்படும் அவர், புதிய தலைமுறை நடிகர்களுடன் எளிதில் இணைந்து கொள்வது சிறப்பு.

தனுஷ், சிவகார்த்திகேயன், தினேஷ் என அனைவருடனும் தொடர்கிறது அவர் பயணம். அனைத்துமே புதிய பரிமாணத்தில் அவரைக் காட்டுகின்றன.
எப்படி இது சாத்தியம்?
"எல்லாம் நம்ம மனசுதான். சினிமாவை நேசிப்பவர்களுக்கு இது சாத்தியம்தான். அட்டகாசமான இளைஞர்கள் இன்று தமிழ் சினிமாவுக்குள் படை எடுத்து வருகிறார்கள்.
அப்படி வரும் புதியவர்களை நாம்தான் இருகரங்களை நீட்டி மனதார வர வேற்க வேண்டும். அவர்களோடு இணைந்து பயணிக்கவேண்டும். ‘அந்த காலத்தில் எல்லாம் அப்படி, இப்படி!' என்று பேசிக் கொண்டிருந்தால், சினிமா எப்படி அடுத்த கட்டத்துக்கு நகரும்?" என்கிறார்.
அடுத்த ஆண்டு அவர் இயக்கத்தில் வரவிருக்கும் கிட்ணா படத்தில் 5 விதமான பாத்திரங்களில் நடிக்கும் சமுத்திரக்கனி, அரை டஜன் படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











