அல்லு அர்ஜுன் படம் பார்க்க வராருன்னு போலீஸுக்கு தெரியும்.. சந்தியா தியேட்டர் வெளியிட்ட ஆதாரம்!
ஹைதராபாத்: புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஷோ டிசம்பர் 4ம் தேதி இரவு 9.30 மணிக்குத் திரையிடப் போகிறோம். படத்தில் நடித்துள்ள நடிகர்கள் தியேட்டருக்கு வரவுள்ளனர். அதன் காரணமாக போதிய அளவில் போலீஸ் பந்தோபஸ்த் வேண்டும் என காவல் நிலையத்துக்கு அளித்த கோரிக்கை கடிதத்தை சந்தியா தியேட்டர் நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக அல்லு அர்ஜுன் புகழ் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. வெறும் 6 நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூல் சாதனையை நிகழ்த்தி இந்தியாவையே அல்லு அர்ஜுன் திரும்பி பார்க்க வைத்துவிட்டார்.

புஷ்பா 2 படத்தில் முதலமைச்சரையே ஹீரோ மாற்றுவது போலவும் கடைசியில் சிஎம் என் தொக்கு என கிண்டல் அடிக்கும் வசனங்கள் எல்லாம் உள்ள நிலையில், அதற்கான பழிவாங்கும் நடவடிக்கை தான் தற்போது நடைபெறுவதாக பாஜக கட்சியை சேர்ந்த பந்தி சஞ்சய், ராஜாசிங் உள்ளிட்ட அரசியல்வாதிகள் அரசுக்கு எதிரான முழக்கத்தையும் கண்டனத்தையும் எழுப்பி வருகின்றனர்.
ஸ்பெஷல் ஷோ ரத்து: அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படத்தின் ப்ரீமியர் ஷோவில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தால் பெண் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக தெலங்கானாவில் புஷ்பா 2 படத்துக்கான சிறப்பு காட்சிகளை ரத்து செய்ய தெலங்கானா அரசு நடவடிக்கையை எடுத்தது. மேலும், போலீஸார் இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் மீது வழக்கு தொடர்ந்த நிலையில், இன்று வீட்டின் பெட்ரூமுக்கே வந்து அவரை கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்தியா தியேட்டர் வெளியிட்ட ஆதாரம்: அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படம் பார்க்க வருகிறார் என்பதை முன் கூட்டியே படக்குழு மற்றும் தியேட்டர் நிர்வாகம் அறிவிக்கவில்லை என்றும் அந்த பெண் உயிரிழந்ததற்கு அல்லு அர்ஜுன் தான் காரணம் என போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ள நிலையில், டிசம்பர் 2ம் தேதியே காவல் நிலையத்தில் பந்தோபஸ்த் கோரி அளித்த கடிதத்தை தற்போது சந்தியா தியேட்டர் வெளியிட்டுள்ளது. புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாவதை முன்னிட்டு 4ம் தேதி இரவு 9.30 மணிக்கு ஸ்பெஷல் ப்ரீமியர் காட்சி திரையிடப்படுகிறது. படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் வருகின்றனர். அதன் காரணமாக அதிகளவில் கூட்டம் கூடும். அதற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜுன் எப்படி பொறுப்பேற்பார்: உரிய அனுமதியை கோரி போலீஸ் நிலையத்தில் சந்தியா தியேட்டர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், போலீஸார் சரியான பாதுகாப்பை கொடுக்கவில்லை என்றும் இதற்கு அல்லு அர்ஜுன் எப்படி பொறுப்பேற்பார் என தெலங்கானாவில் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் முதல் எதிர்க்கட்சியினர் வரை பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்: நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது இந்த வழக்கு விசாரணை தொடர்பாக நாம்பலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். வழக்கு விசாரணையை நீதிபதி நடத்தி வருகிறார். அல்லு அர்ஜுனுக்கு ஜாமின் கிடைக்குமா? அல்லது விசாரணை காவலில் சிறையில் அடைக்கப்படுவாரா என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications











