சூது கவ்வும் 2வை தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2.. இதுல ஹீரோ யார் தெரியுமா?
சென்னை: விஜய் சேதுபதியின் ஆரம்ப காலமே தமிழ் சினிமாவில் அசத்தலான ஓபனிங்காகத் தான் இருந்தது. பிட்சா, சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் என கோலிவுட்டின் நம்பிக்கையான நட்சத்திரமாக மாறிய அவர் தற்போது பாலிவுட் வரை அசத்தி வருகிறார்.
2ம் பாகம் சாபம் ஏற்கனவே தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்து வரும் நிலையில், சில இயக்குநர்கள் வேறு வழியில்லாமல் பார்ட் 2 படங்களை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் பாகத்தை எடுத்த தயாரிப்பு நிறுவனங்களும் 2ம் பாகத்தை எடுத்து கல்லா கட்டலாம் என நினைத்தாலும் கடைசியில் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

சூது கவ்வும் 2ம் பாகத்தில் சிவா நடித்த நிலையில், அந்த படம் முதல் பாகத்தை எப்படி சாமி ஸ்கொயர், இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் கெடுத்ததோ அதே போலவே கெடுத்து விட்டது. இந்நிலையில், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2 படம் உருவாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா: 2013ம் ஆண்டு இயக்குநர் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நந்திதா, பசுபதி மற்றும் ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. இன்றளவும் குமுதா ஹாப்பி அண்ணாச்சி என விஜய் சேதுபதி பல மேடைகளில் பேசி வரும் அளவுக்கு அந்த படத்தின் காட்சிகளும் வசனங்களும் ரசிகர்களுடன் மிகவும் இரண்டற கலந்திருக்கிறது.
கொரோனா குமார்: அந்த படத்தின் 2ம் பாகம் கொரோனா குமார் என்கிற தலைப்பில் உருவாகப் போவதாகவும் சிம்பு ஹீரோவாக நடிக்கப் போகிறார் என லாக்டவுன் சமயத்தில் பேச்சுவார்த்தைகள் அடிபட்டன. ஆனால், கொரோனாவையே மக்கள் மறந்துவிட்ட நிலையில், அந்த படத்தை கைவிட்டு சிங்கப்பூர் சலூன் படத்தை கோகுல் ஆர்.ஜே. பாலாஜியை வைத்து இயக்கினார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. ரவுத்திரம், காஷ்மோரா, ஜுங்கா, அன்பிற்கினியாள் மற்றும் சிங்கப்பூர் சலூன் என கோகுல் இயக்கிய படங்கள் எல்லாம் அவருக்கு பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படங்களாக அமையவில்லை. இந்நிலையில், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2 படத்தை இயக்க முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சாண்டி தான் ஹீரோ: கோகுல் இயக்கத்தில் உருவாகவுள்ள இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2 படத்தில் சாண்டி ஹீரோவாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் சேதுபதியின் சுமார் மூஞ்சு குமாரு கதாபாத்திரத்துக்கு சாண்டி பக்காவாக செட்டாவார் என்றே தெரிகிறது. தொடர்ந்து லோகா, கிஷ்கிந்தபுரி என மற்ற மொழி படங்களில் அசத்தி வரும் சாண்டி நடிப்பில் இந்த படம் உருவானால் கோகுலுக்கு கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பார்ட் 2 சாபம் காரணமாக முதல் படத்தை கெடுத்து விட்டது என்கிற பேச்சுக்கள் அடிபடாத அளவுக்கு கோகுல் இந்த படத்தை இயக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











