என்னை ஏமாற்றிவிட்டார்: இயக்குனர் மீது நடிகை பரபரப்பு புகார் #MeToo
பெங்களூர்: தன் முதல் பட இயக்குனர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை சஞ்சனா கல்ராணி தெரிவித்துள்ளார்.
கன்னடம், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருபவர் சஞ்சனா கல்ராணி. அவர் 11ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே நடிக்க வந்துவிட்டார்.
இந்நிலையில் தானும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

சினிமா
நான் 15 வயதில் நடிக்க வந்தேன். பல கனவுகளுடன் சினிமா துறைக்கு வந்தேன். எனக்கு நடிப்பு மீது அளவு கடந்த ஆர்வம். அதனால் படங்களில் நடித்துவிட்டு மீண்டும் படிக்க செல்ல வேண்டும் என்று நினைத்தேன். நான் நடிக்க வந்தபோது 11ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என் முதல் படத்தின் இயக்குனர் மர்டர் இந்தி படத்தை எனக்கு போட்டுக் காண்பித்தார். இந்த படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய விரும்புவதாக அவர் கூறினார்.

கன்னடம்
இந்த படத்தையா, நான் நடிக்க மாட்டேன் என்று கூறியதற்கு கன்னட ரசிகர்களுக்கு ஏற்ப படத்தில் மாற்றம் செய்யப்படும் என்று இயக்குனர் தெரிவித்தார். ஒரேயொரு முத்தக் காட்சியில் நடிக்க நான் ஒப்புக் கொண்டேன். படப்பிடிப்புக்காக பாங்காக்கிற்கு சென்றபோது என் அம்மாவையும் துணைக்கு அழைத்து வருவேன் என்று நான் கூறியதற்கு அவர்கள் சம்மதித்தார்கள்.

அம்மா
இருப்பினும் பாங்காக் சென்ற பிறகு என் அம்மாவை படப்பிடிப்பு தளத்திற்கு வர அனுமதிக்கவில்லை. அங்கு நிறைய பேர் இருப்பார்கள், அம்மா வர வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். அதன் பிறகு அவர்கள் பல முத்தக் காட்சிகளை படத்தில் சேர்த்தார்கள். மேலும் என் மார்பு பகுதி, கால்களை ஆபாசமான வகையில் படம் எடுத்தார்கள். கேமராவை அந்த பகுதிகளிலேயே காட்டினார்கள்.

மிரட்டல்
இப்படி எல்லாம் செய்யாதீர்கள் என்று நான் எதிர்ப்பு தெரிவித்தேன். அதற்கு அவரோ, நாங்கள் சொல்லும்படி எல்லாம் செய்யவில்லை என்றால் உன் கெரியரை நாசமாக்கிவிடுவோம் என்று என்னை மிரட்டினார். கனவுகளுடன் வந்த சின்னப் பெண்ணை அவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு பயன்படுத்திவிட்டார்கள் என்றார் சஞ்சனா.


Click it and Unblock the Notifications











