கே.ஜி.எஃப் சாப்டர் 2 ஷூட்டிங்.. 'அதீரா' சஞ்சய் தத் கலந்துகொள்வது எப்போது? படக்குழு புது தகவல்!
சென்னை: கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தின் ஷூட்டிங்கில், அதீரா கேரக்டரில் நடிக்கும் சஞ்சய் தத் எப்போது கலந்துகொள்கிறார் என்கிற தகவல் தெரியவந்துள்ளது.
கன்னடத்தில் உருவான 'கே.ஜி.எஃப்' படம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.
அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வரவேற்பை பெற்றதை அடுத்து, இதன் இரண்டாம் பாகம், கேஜிஎப் சாப்டர் 2 என்ற பெயரில் உருவாகி வருகிறது.

நடிகர் சஞ்சய் தத்
முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல், இதையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த ஶ்ரீனிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உள்பட பலர் நடிக்கின்றனர். இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற கேரக்டரில் வில்லனாக நடிக்கிறார். முதல் பாகம் ஹிட்டானதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆகஸ்டில் மூச்சுத்திணறல்
இந்நிலையில், சஞ்சய் தத்துக்கு ஆகஸ்ட் மாதம் மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அவர், இரண்டு நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பினார். பின் சோசியல் மீடியாவில் திடீரென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

சிலகாலம் இடைவெளி
அதில், 'மருத்துவ சிகிச்சைக்காக, நடிப்புக்கு சில காலம் இடைவெளி விட்டிருக்கிறேன். கவலைப்பட வேண்டாம், உங்கள் அன்பாலும் வாழ்த்துகளாலும் விரைவில் திரும்புவேன்' என்று கூறி இருந்தார். இது பரபரப்பானது. பின்னர் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

டிசம்பரில் ஐதராபாத்
அதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், புற்றுநோயில் இருந்து மீண்ட அவர், நவம்பர் மாதம் கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் மாதம் அவர் ஐதராபாத்தில் நடக்கும் ஷூட்டிங்கில் பங்கேற்க இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











