இங்க இப்படின்னா, அங்க அப்படி... பாலகோட் அட்டாக்கை படமாக்கும், இன்னொரு குரூப்!
மும்பை: பாலகோட் தாக்குதலை மையமாக வைத்து, தானும் படம் தயாரிக்க போவதாகத் தெரிவித்துள்ளார், தயாரிப்பாளரும் இயக்குனருமான சஞ்சய் லீலா பன்சாலி.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய விமானப்படை பாலகோட் தாக்குதலை நடத்தியது. அதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை விரட்டிய, விங் கமாண்டர் அபிநந்தன், அந்நாட்டு எல்லைக்குள் துரதிர்ஷ்டவசமாக பாராசூட்டில் இறங்கினார்.

அவரைப் பிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் கேள்விகளுக்கு வீரமாகவும், விவேகமாகவும் பதிலளித்தார். அவரது துணிவு பாராட்டப்பட்டது. விமானி அபிநந்தன், பாகிஸ்தானிடம் சிக்கிய சம்பவம் உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்தது. பின்னர் அபிநந்தனை, பாகிஸ்தான் விடுவித்தது.
அபிநந்தன், பாகிஸ்தானில் இருந்து மீண்டு வந்த சம்பவத்தை வைத்து படம் தயாரிப்பதாகவும் அதற்கு பாலகோட் என்று டைட்டில் வைத்திருப்பதாகவும் நடிகர் விவேக் ஓபராய் கடந்த சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். இவர் தமிழில் விவேகம் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்தவர்.
இந்நிலையில் இதே கதையை மையமாக வைத்து, சஞ்சய் லீலா பன்சாலி, தயாரிப்பாளர் பூஷன் குமாருடன் இணைந்து படம் தயாரிப்பதாக அறிவித்துள்ளார். இதை அபிஷேக் கபூர் எழுதி இயக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை மூன்று பேர் இயக்கி வருகின்றனர். இந்நிலையில் இந்தியில் இப்படியொரு போட்டி ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











