35 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் வெளியாகும் சங்கராபரணம்!
சென்னை: 35 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி சாதனைப் படைத்த இசைக் காவியமான சங்கராபரணம் மீண்டும் வெளியாகிறது, புத்தம் புதிய காப்பியாக!
கே விஸ்வநாத் இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் சங்கராபரணம்.
தமிழ்நாட்டிலும் தெலுங்கிலேயே வெளியான படம்
இதே படம் மொழிமாற்றம் செய்யப்படாமல் நேரடியாக தெலுங்கிலேயே தமிழகம் முழுவதும் வெளியானது.
தமிழ்நாட்டில் வசூலை அள்ளிக் குவித்து இந்திய திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தது இந்தப் படம். காரணம் அதற்கு முன் எந்தத் தெலுங்குப் படமும் இங்கு அப்படி ஓடியதில்லை.

பரத நாட்டியம்
பரத நாட்டியத்தையும் - இசையையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட கதையில் வெட்டுக் குத்து,ஆபாசம் வன்முறை என கமர்ஷியல் வகையறா எதுவுமில்லாமல் உணர்வுகளை தட்டி எழுப்பி படம் பார்ப்பவர்கள் அனைவரையும் அழ வைத்தது, மொழி புரியாதவர்களையும் கூட.

35 ஆண்டுகளுக்குப் பிறகு
35 வருடங்களுக்குப் பிறகு சங்கராபரணம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. அத்துடன் 35 எம்எம்மிலிருந்து சினிமாஸ்கோப் ஆகவும், டிடிஎஸ் மற்றும் டிஜிட்டல் என இன்றைய நவீன தொழில்நுட்பங்களிலும் சங்கராபரணத்தை புதிய காப்பியாக மாற்றியுள்ளனர்.
இதற்காக கணிசமாக செலவழித்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

சோமையாஜூலு
சோமையா ஜுலு, மஞ்சுபார்கவி, ராஜலட்சுமி, துளசி, சந்திரமோகன், அல்லு ராமலிங்கய்யா ஆகியோர் நடித்துள்ளனர்.

கேவி மகாதேவன்
இந்தப் படத்தின் முதுகெலும்பே அதன் இசைதான். திரையிசைத் திலகம் என்று போற்றப்பட்ட கேவி மகாதேவன் இசையில் அத்தனைப் பாடல்களும் பெரும் வெற்றி பெற்றவை. மேடைக் கச்சேரிகளில் தவறாமல் இடம்பிடித்தவை. கேவி மகாதேவனின் அதே இசை, புதிதாக இசைத்திருக்கிறார் டிஜிட்டலுக்காக ரவிராகவ்.

பாலுமகேந்திரா
இந்தப் படத்தின் ஒளிப்பதிவு பாலுமகேந்திரா. அன்றைக்கு பெரிதும் பாராட்டப்பட்டது. வி ஜெய்சங்கர் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். பெரிய படமான இதனை இன்றைய ரசனைக்கேற்ப ட்ரிம் செய்துள்ளார்.

தமிழில்...
முன்பு நேரடி தெலுங்குப் படமாக வெளியான சங்கராபரணத்தை, இப்போது தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். தமிழ் வசனங்களை எழுதியிருப்பவர் ஆர் எஸ் ராமகிருஷ்ணன். பாடல்களை தமிழமுதனும் தாயன்பனும் எழுதியுள்ளனர்.

மரியாதை
நூறாண்டு விழா கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்திய சினிமாவின் புகழை உலக அரங்கில் பறைசாற்றிய படங்களில் முக்கியமான படம் 'சங்கராபரணம்'.
"இந்த படைப்பை உருவாக்கிய கலை மேதை கே.விஸ்வநாத் அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறோம்" என்ற வாசகம் கொண்ட கார்டுடன்தான் படத்தை ஆரம்பித்துள்ளார்களாம், தமிழில்!


Click it and Unblock the Notifications











