'பவர் ஸ்டார்?... செருப்பாலடிப்பேன்!' - சந்தானத்தின் இப்போதைய மனநிலை!!
பவர் ஸ்டார்... என்ற பெயரை எதிரிலிருப்பவர் உச்சரித்ததுமே, 'செருப்பாலடிப்பேன்' என்று சந்தானம் கொந்தளிக்கிறார்.
இது தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படத்தில் இடம் பெறும் ஒரு காட்சி.
பவர் ஸ்டார் என தனக்குத்தானே பட்டம் சூட்டிக் கொண்டு லத்திகா என்ற படத்தை தயாரித்து இயக்கி நடித்தார் சீனிவாசன். அந்தப் படத்தை 200 நாட்கள் ஓட்டினார். காசு கொடுத்துதான் அந்தப் படத்தை ஓட்டினேன் என வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா...
இந்த பவர் ஸ்டாருடன் திடீரென ஒரு நாள் கைகோர்த்தார் முன்னணி நகைச்சுவை நடிகர் சந்தானம். இருவரும் இணைந்து தயாரித்த முதல் படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா.
பாக்யராஜின் இன்று போய் நாளை வா படக் கதையை சட்ட விரோதமாக திருடி எடுக்கப்பட்ட இந்தப் படம், பல்வேறு குற்றச்சாட்டுகளையும் தாண்டி நன்றாகவே ஓடி வசூலைக் கொடுத்தது.

சந்தானம் - பவர் கூட்டு
இந்த வெற்றிக்குப் பிறகு சந்தானம் - பவர் ஸ்டார் காம்பினேஷனுக்கு ஏக கிராக்கி. பல படங்களில் சந்தானத்திடம் கேவலமாகத் திட்டு வாங்கும் கேரக்டரில் பவர் ஸ்டார் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஜெயிலில் பவர்
கிட்டத்தட்ட 20 படங்களுக்கும் மேல் ஒப்பந்தமானார் பவர். இந்த நிலையில்தான் ஏகப்பட்ட மோசடி வழக்குகள் அவர் மீது பாய்ந்தன. குண்டர் சட்டத்தில் கைதாகும் அளவுக்கு நிலைமை முற்றிப் போய்விட்டது.

பவரைக் கட் பண்ண சந்தானம்
இந்த நிலையில் பவர் ஸ்டாரை தன் படங்களில் சிபாரிசு செய்த சந்தானம், டமாலென்று பின்வாங்கிவிட்டார். பவர் ஸ்டாரின் பணத்தில்தான் சந்தானம் சொந்தப் படம் எடுக்கிறார் என்று திரையுலகில் பலரும் கூறி வந்தனர். இந்த நேரம் பார்த்து பவர் ஸ்டாரும் ஜெயிலுக்குள் போய்விட்டதால், இனி நிரந்தரமாக அந்த லிங்கை துண்டித்துக் கொள்வதே உத்தமம் என்று முடிவு செய்த சந்தானம், பவருக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என உணர்த்தும் வகையில் நடந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்.

வாலிப ராஜா
முதல் கட்டமாக, தன்னுடன் பவர் ஸ்டார் நடிக்கவிருந்த அனைத்துப் படங்களிலிருந்தும் அவரை தூக்கிவிட்டார். அதில் ஒன்றுதான் வாலிப ராஜா. இதில் பவர் ஸ்டார், சந்தானம், சேது ஆகிய மூவரும் நடிக்கவிருந்தனர். இப்போது சந்தானமும் சேதுவும் மட்டும் நடிக்கின்றனர்.

செருப்பாலடிப்பேன்...
இந்த நிலையில்தான் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் வேண்டுமென்றே ஒரு வசனம் வைத்துள்ளனர். ஒரு காட்சியில், 'நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லையென்றால் நான் எப்போதே இறந்திருப்பேன்' - இதைச் சொன்னது யார் என்று ஒரு கேள்வியை சித்தார்த்திடம் கேட்பார் சந்தானம். அதற்கு 'பவர் ஸ்டார்?' என சித்தார்த் கேட்க, உடனே 'செருப்பாலடிப்பேன்,' என கோபமாக சொல்வார் சந்தானம்.
பவர் ஸ்டாருக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதை வெளிப்படையாகச் சொல்ல சந்தானம் பிரயோகித்த டெக்னிக் இது, என்கிறார்கள் படம் பார்த்த சினிமாக்காரர்கள்!


Click it and Unblock the Notifications











