சர்ச்சையை கிளப்பிய ராமசாமி வசனம்.. ஃப்ரீ புரமோஷன்னு சொன்ன சந்தானம்.. கொதிக்கும் ரசிகர்கள்!
சென்னை: கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ் மற்றும் லொள்ளு சபா டீம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி படம் வரும் பிப்ரவரி 4ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. அந்த படத்தின் ஆடியோ லான்ச் இன்று நடைபெற்றது. அதில், மேடை ஏறி பேசிய சந்தானம் சர்ச்சையை கிளப்பிய ராமசாமி வசனம் பற்றி பேசியது ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது.
கடந்த வெளியான படங்களிலேயே சந்தானத்துக்கு டிடி ரிட்டர்ன்ஸ் படம் மட்டுமே நன்றாக ஓடியது. அந்த படத்தைத் தொடர்ந்து வெளியான கிக் மற்றும் 80ஸ் பில்டப் படங்கள் படுதோல்வியை சந்தித்தன. இந்நிலையில், டிக்கிலோனா படத்திற்கு பிறகு மீண்டும் கார்த்திக் யோகியுடன் சந்தானம் இணைந்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என பேசியுள்ளார்.

யஷ், பிரபாஸ் எல்லாம் பெரிய ஆள் இல்லை: கேஜிஎஃப் படம் வருவதற்கு முன்னாடி யஷ் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டை தாங்க கூடிய ஹீரோவாக இல்லை. பாகுபலி வரும் போது பிரபாஸ் 300 கோடி ரூபாய் பட்ஜெட் ஹீரோவாக இல்லை. ஆனால், அந்த படங்களின் கதைகள் வெற்றிப் பெற்ற நிலையில் தான் ரசிகர்கள் அவர்களை கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தின் தயாரிப்பாளரும் என்னிடம் அதைத்தான் சொன்னார். ஹீரோவை நம்பி படம் பண்ணல, கதையை நம்பித்தான் படம் பண்ணுகிறேன் என்று நிச்சயம் என் வாழ்க்கையிலேயே இதுதான் எனக்கு பெரிய பட்ஜெட் படம் என வடக்குப்பட்டி ராமசாமி படம் குறித்து ஆடியோ லாஞ்சில் சந்தானம் பேசினார்.
புரமோஷனா மாறிடும்: படத்தில் ஒரு விஷயம் திடீரென சர்ச்சையாக மாறியது. தயாரிப்பாளர் உடனே கொஞ்சம் பயப்பட ஆரம்பித்து விட்டார். அதையெல்லாம் புரமோஷனா பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறினேன். நானும் கார்த்திக்கும் கவுண்டமணி ரசிகர்கள், டிக்கிலோனா டைட்டிலும் கவுண்டமணி காமெடியில் இருந்து வந்தது தான். வடக்குப்பட்டி ராமசாமி டைட்டிலும் கவுண்டமணி காமெடியில் இருந்து வந்தது தான். வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் எந்தவொரு தவறான விஷயத்தையும் யார் மனதையும் புண்படுத்தும் விதத்திலும் படம் பண்ணவில்லை. வடக்குப்பட்டி ராமசாமியின் கதை மட்டுமே இடம்பெற்றுள்ளது. வேறு எந்த சர்ச்சையும் படத்தில் இருக்காது. ரசிகர்கள் சிரிக்க மட்டுமே படம் பண்ணி வருகிறேன் என சந்தானம் பேசியுள்ளார்.
புரமோஷனுக்கு பெரியாரா?: வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் "ஊருக்குள்ள சாமியே இல்லைன்னு சொல்லிட்டுத் திரிஞ்சானே அந்த ராமசாமியா" என வசனம் இடம்பெற, "அந்த ராமசாமி இல்லை" என சந்தானம் நக்கலாக பேசும் வசனம் தான் சர்ச்சையை கிளப்பியது. அதன் காரணமாகவே இந்த படத்தை வெளியிடுவதில் இருந்து ரெட் ஜெயன்ட் ஒதுங்கியது. இந்நிலையில், சர்ச்சையான விஷயத்தை புரமோஷனாக பயன்படுத்தலாம் என ஆடியோ வெளியீட்டு விழாவில் சந்தானம் பேசியதற்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











