சூர்யாவும், ஜோதிகாவும் கோபப்படமாட்டார்கள்.. கிண்டல் எல்லாம் செய்யவில்லை.. நம்பிக்கையில் சந்தானம்
சென்னை: காமெடி ரோல் மட்டுமே செய்துவந்த சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார். அதனைத் தொடர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அப்போதிருந்து தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடித்துவரும் அவர் இப்போது டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் நடித்திருக்கிறார். மே 16ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கும் சூழலில் அவர் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
கோலிவுட்டின் காமெடி ஆக்டர்களில் கொடிகட்டி பறந்தவர் சந்தானம். கவுண்டமணியின் ஜெராக்ஸ் என்று அவர் வர்ணிக்கப்பட்டாலும் காலத்துக்கு தகுந்தவாறு தனது காமெடியையும், காமெடி வசனங்களையும் டெலிவர் செய்தார். இதன் காரணமாக குறுகிய காலத்திலேயே அவருக்கென்று தனி இடம் உருவானது. அவர் இல்லாமல் எந்தப் படங்களும் இல்லை என்ற நிலைமையும் இருந்தது. ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், ஆர்யா, தனுஷ், விஷால் என பல ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.
ஹீரோவான சந்தானம்: செம ஃபார்மில் சென்றுகொண்டிருந்த சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை முதன்முதலாக தயாரித்தார். அதில் அவருடன் பவர் ஸ்டார் சீனிவாசன், சந்தானத்தின் நண்பர் சேது உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். அதனைத் தொடர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் சந்தானம். அன்றிலிருந்து இன்றுவரை ஹீரோவாக மட்டுமே நடித்துவருகிறார்.
பெரிய வெற்றி இல்லை: அவர் தொடர்ந்து ஹீரோவாக நடித்தாலும் பெரிய வெற்றி ஒன்றும் அவருக்கு கிடைக்கவில்லை. அவரும் இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, ஏ1, டகால்டி, பிஸ்கோத் என ஹீரோவாக நடித்துக்கொண்டே இருக்கிறார். அந்தப் படங்களில் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை கொடுத்த படம் என்றால் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம்தான். அந்தப் படம் சந்தானம் ஹீரோவாக நடித்த மற்ற படங்களை காட்டிலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரெஸ்பான்ஸை பெற்றது குறிப்பிடத்தக்கது.

படத்தின் இரண்டாவது பாகம்: கடைசியாக அவர் நடித்த இங்க நான்தான் கிங்கு படமும் தோல்வியைத்தான் சந்தித்தது. இப்படிப்பட்ட சூழலில் அவர் ஹீரோவாக எப்படியாவது ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். இப்போது அவர் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்திருக்கிறார். அப்படத்தில் அவருடன் செல்வராகவன், கௌதம் மேனன், மொட்டை ராஜேந்திரன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி என ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள். படமானது மே 16ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
உயிரின் உயிரே: படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் ரிலீஸானது. அதில் காக்க காக்க படத்தில் இடம்பெற்ற உயிரின் உயிரே பாடலை யாஷிகா ஆனந்த்தையும், கௌதம் மேனனையும் வைத்து ரீ க்ரியேட் செய்திருந்தார்கள். அது பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.மேலும் படத்தின் விழாவில் பேசிய நடிகர் சிம்புவும், 'நான் எதை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்வேன். எங்கள் டைரக்டரை (கௌதம்) இப்படி செய்திருக்கீங்களே அதை மட்டும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்' என்று ஜாலியாக பேசியிருந்தார்.
சந்தானத்தின் விளக்கம்: இந்நிலையில் படம் ரிலீஸாக இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. அந்தவகையில் ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சந்தானம், "டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இடம்பெற்றிருக்கும் உயிரின் உயிரே பாடலை பார்த்து சூர்யாவும், ஜோதிகாவும் அவர்களின் ரசிகர்களும் கோபப்படமாட்டார்கள். ஏனெனில் அந்தப் பாடலை இயக்கிய கௌதம் மேனனே அதில் நடித்திருக்கிறார். படம் பார்க்கும்போது அந்தப் பாடல் எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
அதேபோல் நான் திருப்பதி பெருமாள் பக்தன். ஒவ்வொரு படம் ரிலீஸாகும்போதும் திருப்பதிக்கு நடந்து செல்வேன். இப்படத்தின் பாடலில் நாங்கள் பெருமாளை கிண்டல் செய்யவில்லை. சென்சார் போர்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே அந்தப் பாடல் வந்திருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications










