இனவெறியர்கள்... திருத்தணி சம்பவம் பற்றி சந்தோஷ் நாராயணன்!
சென்னை: ஒடிசாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் திருத்தணியில் ரயில் நிலையம் அருகே சிறார்களால் பட்டாக்கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கப்படும் சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், கடந்த பத்தாண்டுகளாக நான் சென்னையில் வசித்து வரும் பகுதி, குறிப்பாக இரவில், போதைப்பொருட்களுக்கு அடிமையான குண்டர்கள் மற்றும் குற்றவாளிகளால் மிகவும் அபாயகரமான பகுதியாக இருக்கிறது. எனது ஸ்டுடியோ தளத்தில் பணிபுரியும் பல அப்பாவி கட்டுமானத் தொழிலாளி நண்பர்கள் சமீபத்தில் பலமுறை தாக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அத்தகைய குற்றவாளிகளில் ஒருவன், வரம்பை மீறி போதையில் இருந்ததால், காவல்துறை தடியடி நடத்தியபோதும் எந்த வலியும் இல்லாமல் சிரித்துக்கொண்டிருந்தான். மேலும், இந்தத் தாக்குதல் நடத்துபவர்களில் பெரும்பாலானோர் பெருமைமிக்க இனவெறியர்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்களை கண்மூடித்தனமாக வெறுத்துத் தாக்குபவர்கள்.

சந்தோஷ் நாராயணன்: பல உள்ளூர் அரசியல் பிரிவுகளும், பல சாதி அடிப்படையிலான குழுக்களும், தங்கள் வாழ்க்கையையும் மற்றவர்களின் வாழ்க்கையையும் அழிக்கும் இந்த பெரும்பாலும் இளம் சிறுவர்களுக்கு ஆதரவாக ஓடி வருகின்றன என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் இது. இந்தச் சம்பவங்களின் யதார்த்தங்களை நாம் ஏற்றுக்கொண்டு, இன்னும் யதார்த்தமாகச் செயல்பட்டு, பல பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முடியாதா? திரையில் சித்தரிக்கப்படும் வன்முறைக்கும், சமீபத்தில் நடந்ததைப் போன்ற நிஜ சம்பவங்களுக்கும் இடையிலான எல்லைகள் மங்கத் தொடங்கிவிட்டன, நாம் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது. நானும் உட்பட என தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஊருக்கு சென்றுவிட்டார்: சிறார்களால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான ஒடிசாவை சேர்ந்த இளைஞர் சூரஜ், குடும்பத்துடன் சண்டை போட்டுவிட்டு தமிழ் நாட்டிற்கு வந்துள்ளார். அவருக்கு இருப்பதற்கு இடம் இல்லாததால் இரவு நேரங்களில் ரயில் நிலையத்தில் தங்குவதை வழங்கமாக கொண்டிருந்தார். ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். ஒடிசா இளைஞருக்கு ஒரு மணிநேரத்துக்கும் மேலாக கவுன்சலிங் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் ஊருக்குச் செல்ல வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்ததால், கையெழுத்து போட்டுவிட்டு ஊருக்கு சென்றுவிட்டார் என நேற்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











