இனிமேல் ரஞ்சித் படத்துக்கு நான் தான் மியூசிக் பண்ணுவேன்.. யாரையும் விடமாட்டேன் - சந்தோஷ் நாராயணன்
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் தனது முதல் ஐந்து படங்களில் இணைந்து பணியாற்றிய இசை அமைப்பாளர் என்றால் அது சந்தோஷ் நாராயணன் தான். அட்டகத்தியில் தொடங்கிய இவர்களது திரைப்படங்கள் சார்பட்டா பரம்பரை வரை நீடித்தது. அதன் பின்னர் ஏற்பட்ட சில மனக்கசப்புகளால் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. குறிப்பாக பா ரஞ்சித்துக்கு சந்தோஷ் நாராயணன் மீது மிகப்பெரிய அதிருப்தி ஏற்பட்டது எனலாம். சார்பட்டா பரம்பரைக்கு பின் பா ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது மற்றும் தங்களால் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த இரண்டு படங்களுக்கு தென்மா மற்றம் ஜிவி பிரகாஷ் இசையமைத்தனர். இப்படியான நிலையில் ரஞ்சித்தின் அடுத்த படங்கள் அனைத்திற்கும் தான் இசையமைப்பேன் என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறியது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அது தொடர்பாக இந்த தொகுப்பை காணலாம்.
முயற்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள சூது கவ்வும் 2 படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பா ரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் தங்களது பழைய நினைவுகளை நினைவுகூர்ந்தனர். குறிப்பாக அட்டகத்தி படத்திற்காக இருவரும் பணியாற்ற தொடங்கிய போது இருவது மத்தியிலும் என்ன மாதிரியான மனநிலை இருந்தது என வெளிப்படுத்தினர். குறிப்பாக சந்தோஷ் நாராயணன் பேசும்போது, நான் முதலில் ரஞ்சித்தைச் சந்திக்கும்போது அவருக்கு நான் போட்டுக் காட்டிய டியூன் எதுவுமே பிடிக்கவில்லை. மேலும் அவர், நேரடியாக மக்களைப் போய் சந்தித்துப்பார். அவர்களிடம் இருக்கும் மியூசிக்தான் எனக்கு தேவை எனக் கூறினார்.

ரஞ்சித் - ச. நா: அதன் பின்னர் நான் மக்களிடம் நேரடியாகச் சென்று, சில இசை வடிவங்களைக் கற்றுக் கொண்டேன். அதற்கு காரணமே ரஞ்சித்தான். இனிவரும் காலங்களில் ரஞ்சித்தின் படங்களுக்கு நான் தான் இசை அமைப்பேன். அதற்கு யாரையும் விடமாட்டேன். யார் குறுக்கே வந்தாலும் அவர்களை அடித்துத் துரத்திவிடுவேன் எனக் கூறினார். இவரது பேச்சினைக் கேட்ட ரஞ்சித் சிரித்துக் கொண்டு நின்றார். மேலும் அங்கிருந்தவர்களும் சிரித்துக் கொண்டு கைதட்டினர். பா. ரஞ்சித்தும் சந்தோஷ் நாராயணனும் இணைந்து விட்டார்கள் என்ற பேச்சு திரையுலகில் வேகமாக பரவி வருகின்றது.

நன்றி: சந்தோஷ் நாராயணனுக்கு முன் பேசிய பா. ரஞ்சித், நான் முதலில் சந்தோஷ் நாராயணனைப் பார்த்தபோது, அவர் போட்டுக் காட்டிய இசை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் அதன் பின்னர் அவர் தன்னை மெருகேற்றிக் கொண்டு, தனது இசைக்கு என தனி பாணியை உருவாக்கிக் கொண்டார். நான் மட்டும் இல்லாமல் பல இயக்குநர்கள் தங்களது ஆரம்ப காலங்களில் வெற்றிப் படங்களைக் கொடுக்க சந்தோஷ் நாராயணனின் இசை மிகவும் முக்கியமானதாக அமைந்தது. அந்த வகையில் சந்தோஷ் நாராயணனுக்கு நன்றிகள்" எனக் குறிப்பிட்டார்.

பேச்சு: இவர்கள் இருவரும் இவ்வாறு மாறி மாறி பாராட்டிக் கொண்டதும், சந்தோஷ் நாராயணின் தனது பேச்சில் குறிப்பிட்டதைப் பார்த்த ரசிகர்களுக்கு இவர்கள் இருவரும் இணைந்து அடுத்தடுத்த படங்களில் பணியாற்றுவார்கள் என்ற, பேச்சும் நம்பிக்கையும் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மேலும் இவர்கள் இணைந்து படத்தில் பணியாற்றினால், படமும் இசையும் சிறப்பாக இருக்கும் எனவும் பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











