பிரசாந்த்தின் அந்தகன்.. ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ஒரே நாள்.. சந்தோஷ் நாராயணன் கூட்டிய பஞ்சாயத்து
சென்னை: பிரசாந்த் பல வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக நடித்திருக்கும் படம் அந்தகன். ஹிந்தியில் வெளியாகி மெகா ஹிட்டான அந்தாதூன் படத்தின் ரீமேக்காக இது உருவாகியிருக்கிறது. இப்படத்தை இயக்குநரும், பிரசாந்த்தின் தந்தையுமான தியாகராஜன் இயக்கியிருக்கிறார். சிம்ரன், ப்ரியா ஆனந்த், கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நேற்று வெளியான நிலையில் புதிய பஞ்சாயத்து ஒன்று ஆரம்பித்திருக்கிறது.
விஜய், அஜித் இப்போது ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோருக்கு அடுத்த இடங்களில் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் விஜய் அல்லது அஜித் ஆகியோரின் ஒருவர் இடத்தில் இருந்திருக்க வேண்டியவர் என்றால் அவர் பிரசாந்த்தான். தியாகராஜனின் மகனான அவர் 90களில் மிக பிரபலமான ஹீரோவாக வலம் வந்தார். நடிக்க வந்த சில காலத்திலேயே மணிரத்னம், பாலுமகேந்திரா போன்ற லெஜெண்ட் இயக்குநர்கள் இயக்கிய படத்தில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

சாக்லேட் பாய்: பிரசாந்த்தை பொறுத்தவரை எந்தக் கதாபாத்திரம் என்றாலும் அசால்ட்டாக செய்யக்கூடியவர். அவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் ஒன்று 90களில் இருந்தது. அந்த ரசிகர் பட்டாளத்தை தக்க வைக்கும் வகையில்தான் அவரது படங்களும் இருந்தன. வரிசையாக பல ஹிட்டுகளை கொடுத்து அதகளப்படுத்தினார். முக்கியமாக பிரசாந்த்துக்கென்று பெண் ரசிகைகள் தமிழ்நாடு முழுவதும் இருந்தார்கள். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கலக்கினார் அவர்.
பிரச்னைகளால் வந்த விலகல்: சூழல் இப்படி இருக்க அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்னைகள் நடந்தது. அதன் காரணமாக சினிமாவிலிருந்து அவரது கவனம் விலகியதை அடுத்து; அவரை சினிமா விலக்கி வைத்தது. சூழல் இப்படி இருக்க பல வருடங்கள் கழித்து ரீ என் ட்ரி கொடுத்திருக்கிறார் டாப் ஸ்டார். அந்தவகையில் அந்தாதூன் படத்தின் ரீமேக்காக உருவாகியிருக்கும் அந்தகன் படத்தில் நடித்திருக்கிறார். படம் எடுக்கப்பட்டு பல வருடங்கள் ஆன பிறகு ஒருவழியாக ஆகஸ்ட் 15அம் தேதி படம் ரிலீஸாகிறது. தியாகராஜன் இயக்கியிருக்கிறார்.
முதல் சிங்கிள் ரிலீஸ்: படத்தின் முதல் சிங்கிள் நேற்று வெளியானது. அதனை விஜய் வெளியிட்டார். அப்போது பிரசாந்த், பிரபுதேவா, தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர். படத்தின் சிங்கிள் ரிலீஸுக்கு அடுத்து பத்திரிகையாளர்களிடமும் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார் பிரசாந்த். முக்கியமாக சினிமாவில் ஃபார்ம் அவுட் ஆனதற்கு தன்னுடைய தந்தை காரணம் இல்லை என்பதை ரத்தின சுருக்கமாக சொல்லி முடித்தார். நேற்று வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் லிரிக்கல் வீடியோவில் பிரசாந்த்தின் நடனமும் அட்டகாசமாகவே இருந்தது. எனவே அவரது எனர்ஜி குறையவே இல்லை என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
பஞ்சாயத்து: இந்நிலையில் அந்தகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ஒரே நாளில் பஞ்சாயத்து ஒன்று முளைத்துள்ளது. அதாவது படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். நேற்று வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிளில் பாடல் வரிகளை உமாதேவியும், ஏகாதேசியும் இணைந்து எழுதியிருக்கிறார்கள்; பாடல் MIxed And Mastered at ஏஎம் ஸ்டூடியோஸின் சிவகுமார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை கவனித்த சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் தள பக்கத்தில், "இந்தப் பாடலுக்கு இசை, வரிகள், மிக்ஸ், மாஸ்டர் என அனைத்தும் செய்தது நான். ஆனால் நான் அதை செய்தேன் என்பதை பரிசோதிக்க எந்தக் கட்டணமும் வசூலிக்கப்போவதில்லை" என்று தெரிவித்திருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அய்யயோ டாப் ஸ்டார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு இப்போதே பஞ்சாயத்தா என்று கேள்வி எழுப்பிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











