காலாவுக்காக ஒரு மில்லியன் 'வாய்ஸ்கள்'...! எப்படி எப்படி?
Recommended Video

ரஜினியின் காலா படத்தின் இசை வரும் மே 9- ம் தேதி வெளியாவதாக தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து சமூக வலைத் தளங்களில் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். படத்தில் எத்தனைப் பாடல்கள், யார் யார் பாடியிருக்கிறார்கள் என்று கேட்டு வருகின்றனர். இவற்றுக்கெல்லாம் விடை இன்னும் சில தினங்களில் தெரியக்கூடும். ஆனால் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டுள்ள ஒரு தகவலால் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு ஏகத்துக்கும் ஏறிவிட்டது.

காலா படத்துக்காக ஒரு மில்லியன் குரல்களைப் பதிவு செய்துள்ளதாக சந்தோஷ் தெரிவித்துள்ளார். என்னது... ஒரு மில்லியன் குரல்களா... எப்படி இது சாத்தியம்?
"ஒரே பாடலில் ஒரு மில்லியன் குரல்களைப் பதிவு செய்ய வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு. அதற்கு சரியான வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். காலாவில் பொருத்தமாக அமைந்துவிட்டது. அன்றாடம் நம்முடன் பயணிக்கும் மனிதர்களின் குரல்களையே பதிவு செய்திருக்கிறோம். எப்படி 1 மில்லியன் குரல்களைப் பிடித்தேன் என்ற விவரமெல்லாம் பின்னர் சொல்கிறேன்," என்று கூறியுள்ளார் சந்தோஷ் நாராயணன்.
ஒரு பாடலில் ஒரு மில்லியன் குரல்கள் என்றால், அந்தப் பாட்டு எப்படி வந்திருக்கும்? வெறும் சப்தங்களாலேயே பாட்டை நிரப்பியிருப்பாரோ?
காலா படம் வரும் ஜூன் 7-ம் தேதி உலகெங்கும் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











