ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ.. சம்பந்தப்பட்ட பெண் என்ன சொல்றாரு தெரியுமா?
சென்னை: Rashmika Mandanna Deep Fake Video (ராஷ்மிகா மந்தனா டீப் ஃபேக் வீடியோ) ராஷ்மிகா மந்தனாவை வைத்து வந்த டீப் ஃபேக் வீடியோ தொடர்பாக அந்த வீடியோவில் ஒரிஜினலாக இருந்த சாரா படேல் பேசியிருக்கிறார்.
இந்திய அளவில் தற்போது பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட திரையுலகில் அறிமுகமான அவரை தெலுங்கு திரையுலகம் கெட்டியாக பிடித்துக்கொண்டது. அங்கு அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டடிக்க அவரது கிராஃப் சரசரவென உயர்ந்தது. அல்லு அர்ஜுன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமடைந்தார்.

ஹிந்தியில் ராஷ்மிகா மந்தனா: அவர் ஹிந்தியில் ரன்பீர் கபூருடன் தற்போது அனிமல் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படமானது விரைவில் வெளியாகவிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடித்து ஹிந்தியில் பெரிய ரவுண்டு வரலாம் என்ற உச்சக்கட்ட நம்பிக்கையில் இருக்கிறார் அவர். இந்த சூழலில் கடந்த சில வாரங்களாகவே ராஷ்மிகா மந்தனாவை வைத்து வீடியோ ஒன்று இணையத்தில் பரவியது.
டீப் ஃபேக்: அதாவது ராஷ்மிகா அரைகுறை ஆடையில் உச்சக்கட்ட கவர்ச்சியில் இருப்பது போன்ற வீடியோதான் அது. அதை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அந்த வீடியோ டீப் ஃபேக் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோ என்பது உறுதியானது. இதுதொடர்பாக நேற்று ராஷ்மிகா மந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில், தொழில்நுட்பத்தை பார்த்தாலே பயமாக இருக்கிறது என சோகத்துடன் நீண்ட பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
சாரா படேல்: அந்த வீடியோவில் இருந்த பெண் சாரா படேல் என்பவர் ஆவார். அவரது உடலில் ராஷ்மிகாவின் முகம் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த விஷயம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் கிளப்பிய சூழலில் மத்திய அரசாங்கமும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்நிலையில் வீடியோவில் இருந்த சாரா படேல் இதுதொடர்பாக அளித்திருக்கும் விளக்கத்தில், “யாரோ ஒரு நபர் எனது உடலையும் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தையும் பயன்படுத்தி டீப் ஃபேக் வீடியோவை உருவாக்கியது என் கவனத்துக்கு வந்திருக்கிறது.
எந்தத் தொடர்பும் இல்லை: இந்த டீப் ஃபேக் வீடியோவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனை பார்த்து நான் ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். இப்படி வீடியோ வெளியானதை பார்த்து வருத்தமும் கொள்கிறேன். இந்த சம்பவத்தால் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடவே பயமாக இருக்கிறது.
கவலை: பெண்கள் மற்றும் சிறுமிகளின் எதிர்காலத்தைப் பற்றி நினைத்தால் கவலையாக இருக்கிறது. இணையத்தில் பகிரப்படுபவை அனைத்துமே உண்மையானவை இல்லை. எனவே நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு வீடியோ மற்றும் புகைப்படங்கள் உண்மையானதா இல்லையா என்பதை தயவு செய்து பல முறை சரி பார்த்துக்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











