Demise: அம்பிகா - ராதாவின் தாயார் மறைவு.. திரையுலகில் சோகம்.. ஆறுதல் சொல்ல திரளும் பிரபலங்கள்!
கொச்சி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் 80களில் கொடிகட்டிப் பறந்த கதாநாயகிகளில் அம்பிகா மற்றும் ராதாவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறார்கள். அவர்களின் தாயார் சரசம்மா நாயர் இன்று அதாவது நவம்பர் 27ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 87. சினிமா அரசியல் என தனது ஈடுப்பாட்டை வெளிப்படுத்தி வந்த சரசம்மாவின் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராதா மற்றும் அம்பிகாவின் வெற்றிக்காக அவரது அர்ப்பணிப்புடன் கூடிய புத்திசாலித்தனம் பெரும் உதவியாக இருந்தது என்பது முக்கியமானது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் தொடங்கி, திரைப்பிரபலங்கள் வரை பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரசம்மா நாயர், நடிகைகள் அம்பிகா மற்றும் ராதாவின் தாய் மட்டுமல்ல; தன்னிகரற்ற தன்னம்பிக்கையும் தலைமைத்துவமும் கொண்ட ஒரு சுயேச்சையான பெண்மணியாகவும் விளங்கினார். காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியில் தீவிரமாக பணியாற்றிய இவர், உள்ளாட்சித் தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தன் மகள்களின் திரைப்பயணத்தை ஆதரித்த அதேநேரம், சமூக சேவை மற்றும் அரசியல் தளங்களிலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்தவர் என்றால் அது மிகையல்ல.

"என் மகள்கள் நடிகைகளாக வேண்டும் என்று நான் ஒருபோதும் விரும்பவில்லை; ஆனால் அவர்கள் விரும்பியதை நான் தடுக்கவும் இல்லை" என்று ஒரு பேட்டியில் புன்னகையுடன் கூறியவர் சரசம்மா நாயர். தன் குடும்பத்திற்கு மட்டுமல்ல, தென்னிந்திய திரையுலகின் பல கலைஞர்களுக்கும் ஆதரவுக் கரமாக இருந்த அவரது இழப்பு, ஏராளமானோருக்கு தனிப்பட்ட இழப்பாகவே பார்க்கப்படுகிறது.
பெண்களுக்கு முன் மாதிரி: சரசம்மா நாயர் அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டவராக மட்டுமல்ல, பெண்களின் உரிமைகளுக்காக உணர்வுபூர்வமாக போராடியவராகவும் திகழ்ந்தார். கேரள மஹிளா காங்கிரஸின் மாநிலத் தலைவராக நீண்ட காலம் பொறுப்பு வகித்தவர்; குறிப்பாக 2014 வரை அந்தப் பதவியில் நீடித்து, பெண்கள் முன்னேற்றத்திற்கான பல திட்டங்களை செயல்படுத்தினார். உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பெண்களுக்கு முன்மாதிரியாகவும் விளங்கினார்.

தீவிர அரசியல்: தான் அரசியல் அரங்கில் தீவிரமாக இருந்தாலும், மகள்கள் அம்பிகா மற்றும் ராதா திரைத்துறையில் பிரகாசிக்க வேண்டும் என்ற கனவை எப்போதும் ஆதரித்தார். அவரது மூத்த மகள் அம்பிகாவும் இன்று தாயின் பாதையிலேயே பயணிக்கிறார். சமீபத்தில் வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த ரிதன்யாவின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதேபோல், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தில் பங்கேற்று, அவர்களது கோரிக்கைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இதுபோன்ற செயல்களால், "சரசம்மா நாயரின் உண்மையான வாரிசு அம்பிகாதான்" என்று திரையுலகமும் சமூக ஆர்வலர்களும் பாராட்டினர். இப்படி இருக்கும்போது சரசம்மாவின் மறைவு மொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











