சரத்குமார் நீக்கம் பழிவாங்கும் நடவடிக்கையாமே: சொல்வது ராதிகா இல்லை ரித்தீஷ்
சென்னை: சரத்குமார் மற்றும் ராதாரவி நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பழிவாங்கும் நடவடிக்கை என நடிகர் ஜே.கே. ரித்தீஷ் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி பதவிக்கு வர பாடுபட்டவர் நடிகர் ஜே.கே. ரித்தீஷ். இதை சங்கத்தின் பொதுச் செயலாளரான விஷால் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விஷால் அணியினரின் நடவடிக்கைகள் பற்றி ரித்தீஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

திருப்தி இல்லை
புதிய நிர்வாகம் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை. தேர்தல் நேரத்தில் சக நடிகர்களை போட்டியாக பார்க்கலாம். ஆனால் தேர்தல் முடிந்த பிறகும் அப்படியே பார்க்கிறார்கள். சக கலைஞர்களை நண்பர்களாகத் தான் நினைக்க வேண்டும்.

சரத், ராதாரவி
நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி ஆகியோர் நீக்கப்பட்டது பழிவாங்கும் நடவடிக்கையே. நமக்குள் பிரச்சனை என்றால் பேசித் தீர்க்க வேண்டும். அப்படி முடியாவிட்டால் தான் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும்.

ஊழல் புகார்
எப்பொழுது பார்த்தாலும் ஊழல் புகார் சொல்லிக் கொண்டே இருந்தால் நிர்வாகம் நேர்மையாகவும் இருக்காது, நாகரீகமாகவும் இருக்காது. ஒரு நல்ல நிர்வாகம் வேண்டும் என்று பாடுபட்டால் அவர்கள் என்னவென்றால் இப்படி பழிவாங்கிக் கொண்டிருக்கிறார்களே. அவர்கள் இப்படி செய்வார்கள் என எனக்கு அப்போதே தெரியாமல் போய்விட்டது.

நிர்வாகம்
பதவி வரும் போகும். புதிய நிர்வாகத்தினர் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடத் துவங்கியதில் இருந்து அவர்களின் கூட்டங்களை புறக்கணித்து வருகிறேன்.

ராதிகா
சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டது விஷாலின் பழிவாங்கும் நடவடிக்கை தான் நடிகை ராதிகா மீண்டும் மீண்டும் கூறி வரும் நிலையில் ரித்தீஷும் அதையே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











