வரலட்சுமி சரத்குமார் திருமணம்.. முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பிதழ் கொடுத்த சரத்குமார்!
சென்னை: சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் அடுத்த மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ள நிலையில், வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் மிகப்பெரிய நட்சத்திர ஓட்டலில் பிரமாண்டமான முறையில் நடக்க உள்ளதால் அழைப்பிதழ் கொடுக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், சரத்குமார் குடும்பத்தினர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இல்லத்தில் சந்தித்து வரலட்சுமியின் திருமண அழைப்பிதழை கொடுத்தார்.
நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி தனது அசாத்தியமான நடிப்பால், ஹீரோவாக மாறி மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகர்களில் ஒருவர். நடிகர், பாடகர், இயக்குநர் என பன்முகம் கொண்ட இவர், 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அதில் தனக்கு என்று தனி உடல் மொழியுடன் நடிப்பதில் இவருக்கு நிகர் இவர் தான்.

நடிகர் சரத்குமார் சினிமாவில் நடிக்க தொடங்கும் காலக்கட்டத்தில் சாயா தேவி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு வரலட்சுமி, பூஜா என்ற இரு மகள்கள் உள்ளனர். அதன்பின்னர் சாயாதேவியை பிரிந்த சரத்குமார் நடிகை ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு ராகுல் என்ற மகன் உள்ளார்.
வரலட்சுமி சரத்குமார்: சரத்குமார் சாயாதேவின் மகளான வரலட்சுமி சரத்குமார் தனது அப்பாவை போலவே சினிமாவில் பல பரிமாணத்தை காட்டி வருகிறார். போடா போடி படத்தின் மூலம் நடிக்க வந்த இவர், ஹீரோயினாக மட்டுமில்லாமல் வில்லியாகவும் நடித்து வருகிறார். திரையில் இவரின் வில்லித்தனத்தை பார்த்து உச்சு கொட்டாதவர்களே இருக்க முடியாது அந்த அளவிற்கு, முன்னணி வில்லன் நடிகர்களுக்கே டஃப் கொடுப்பார்.
பல வருட காதல்: நடிகை வரலட்சுமி, மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிக்கோலஸ் சச்தேவுக்கு ஏற்கெனவே திருமணமாகி, 15 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் விவாகரத்து பெற்றவர். இது குறித்து ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்து வந்த நிலையில், நடிகை வரலட்சுமி அதற்கு தக்க பதிலடி கொடுத்துவந்தார்.

நேரில் அழைப்பிதழ்: இந்நிலையில், வரலட்சுமி, நிக்கோலஸ் சச்தேவ் திருமணம் அடுத்த மாதம் திருமணம் வெளிநாட்டில் நடைபெறவுள்ளதாகவும், வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் மிகப்பெரிய நட்சத்திர ஓட்டலில் பிரமாண்டமான முறையில் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் அழைப்பிதழ் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி ஆகியோர் சென்று அழைப்பிதழ் கொடுத்தனர்.
நேற்று சரத்குமார், நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா ஆகியோரை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து, வரலட்சுமியின் திருமண அழைப்பிதழை கொடுத்தனர். முன்னதாக, நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் பாலா, நடிகர் பிரபு உள்ளிட்டோரையும், நடிகர் சரத்குமார், ராதிகா, வரலட்சுமி ஆகியோர் சந்தித்து, திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











