20 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னத்தால் இணைந்த ஜோடி!
சென்னை: 20 ஆண்டுகளுக்குப் பிறகு சரத்குமாரும் ராதிகா சரத்குமாரும் பொன்னியின் செல்வன் படத்தில் ஜோடி சேருகின்றனர்.
செக்கச் சிவந்த வானம் படத்திற்கு பின் "பொன்னியின் செல்வன்" படத்தை இயக்குகிறார் மணிரத்னம். இதை நடிகை ஐஸ்வர்யா ராய் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கு இடையே தனது மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் வானம் கொட்டட்டும்" படத்தையும் தயாரித்து வருகிறார். அவரது உதவி இயக்குநராக இருந்த தனசேகரன் இப்படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபஸ்டின் சாந்தனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். பின்னணி இசை பாடகராக இருந்த சித் ஸ்ரீராம் இந்த படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். அபியும் நானும் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ப்ரீத்தா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்த படத்துக்கு கலை இயக்குநராக அமரனும், உடை வடிவமைப்பு பணிகளை ஏகா லகானியும் ஏற்றுள்ளனர்.

மெர்சல் பிகில் படங்களுக்கு பாடல் எழுதிய விவேக் இப்படத்திற்கு பாடல் எழுத உள்ளார்.
மேலும் இந்த படத்தில் 20 வருட இடைவெளிக்கு பின் சரத்குமாரும், ராதிகா சரத்குமாரும் ஜோடியாக நடிக்கின்றனர். படத்தில் இருவரும் கணவன்-மனைவியாகவே நடிக்க இருக்கிறார்கள். இருவரும் ஜோடியாக இணைந்து நடித்த படம் சூர்ய வம்சம். சென்னையில் ஒரு நாள் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தாலும், ஜோடியாக நடிக்கவில்லை. சரத்குமார் கமிஷனராகவும், ராதிகா பிரகாஷ் ராஜின் மனைவியாகவும் நடித்திருந்தனர்.

மணிரத்னம் படம் என்றாலே எதிர்பார்ப்பு அதிகம். இந்த நிலையில் இப்படத்திற்கு மேலும் சிறப்பூட்ட சரத்குமார், ராதிகா சரத்குமார் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ள நிலையில், 2020-ல் தான் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் பல நட்சத்திர பட்டாளங்கள் உள்ளதால் இப்படம் சிறந்த விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











