விஜய் தான் சூப்பர் ஸ்டாரா...? நாட்டுல வேற பிரச்சினையே இல்லையா...? கடுப்பான சரத்குமார்
சென்னை: விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் கடந்த 11ம் தேதி ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இந்தப் படம் 7 நாட்களில் 210 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
முன்னதாக வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பேசிய சரத்குமார் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என பேசியிருந்தார்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற வாரிசு சக்சஸ் மீட்டில் இந்த சூப்பர் ஸ்டார் விவகாரம் குறித்து சரத்குமார் காட்டமாக பேசியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் விஜய்
விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள வாரிசு திரைப்படம் கடந்த 11ம் தேதி ரிலீஸானது. அஜித்தின் துணிவும் அதேநாளில் வெளியானதால் பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி நிலவியது. இரண்டு திரைப்படங்களுக்குமே ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், வாரிசு இதுவரை 210 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என சரத்குமார் பேசியிருந்தார்.

வாரிசு சக்சஸ் மீட்
இந்நிலையில், வாரிசு படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் வம்ஷி பைடிப்பள்ளி, சரத்குமார் உள்ளிட்ட வாரிசு படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்து வெளியே சென்ற சரத்குமாரிடம், வாரிசு இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் என விஜய்யை கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். டிசம்பர் 24ம் தேதி நடந்த 'வாரிசு' இசை வெளியீட்டு விழாவில் பேசிய சரத்குமார், விஜய் தான் எதிர்காலத்தில் சூப்பர் ஸ்டார் என்று 'சூர்யவம்சம்' படத்தின் 175வது நாள் விழாவில் கூறியிருந்தேன். அது தற்போது நடந்து விட்டதாகவும், விஜய் தான் இப்போதைய சூப்பர் ஸ்டார் என்றும் கூறியிருந்தார்.

கடுப்பான சரத்குமார்
சரத்குமாரின் இந்த கருத்து சோஷியல் மீடியாக்களில் வைரலானதுடன், ரசிகர்களிடமும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதை குறிப்பிட்டு ரஜினி இன்னும் சூப்பர் ஸ்டார் பட்டத்தோடு இருக்கும்போது, விஜய்யை சூப்பர் ஸ்டார் என ஏன் கூற வேண்டும்? ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் கிடையாதா? என்றெல்லாம் செய்தியாளர்கள் கேட்டனர். இதனால் டென்ஷனான சரத்குமார், திரையுலகில் முன்னணி நடிகர்களாக உள்ள அனைவருமே சூப்பர் ஸ்டார் தான் இதற்காக ஒரு பிரச்சினை எழுப்ப வேண்டாம். எனக்கும் அறிவு இருக்கிறது, நானும் படித்திருக்கிறேன் இதுபோன்ற கேள்விகளை எழுப்பி பாகுபாடு பார்க்காதீர்கள் என பேசியிருந்தார்.

இதுமட்டும் தான் பிரச்சினையா?
மேலும், நாட்டில் எத்தனைப் பிரச்சனைகள் இருக்கின்றன, உங்களுக்கு இது மட்டும் தான் தெரிகிறதா? நான் விஜய் சூப்பர் ஸ்டார் என்று தான் சொன்னேன், அவர் முதலைமைச்சர் ஆவார், பிரதமர் ஆவார் என்று சொல்லவில்லை. என்ன பெரிய சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் என கடும் கோபமாக பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். செய்தியாளர்களிடம் கடுப்பாக பதில் கூறிவிட்டு சரத்குமார் சென்றது வைரலாகி வருகிறது. ஏற்கனவே வாரிசு ரிலீஸுக்கு முன்னர் பேட்டி கொடுத்த சரத்குமார் அப்போதும் இதே கருத்தை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்தும் சூப்பர் ஸ்டார் தான் என கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











