வரலட்சுமியின் திருமண வரவேற்பு.. விஜய் அப்பா முதல் சூர்யா அப்பாவரை.. அணிதிரண்ட திரையுலகினர்
சென்னை: சரத்குமாரின் முதல் மனைவியான சாயாவுக்கு பிறந்த வரலட்சுமி மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை கடந்த இரண்டாம் தேதி தாய்லாந்தில் திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணத்தில் இரு குடும்பத்தாரின் உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் கலந்துகொண்டார்கள்; இதனையடுத்து அரசியல் பிரமுகர்களும், திரையுலக பிரபலங்களும் கலந்துகொள்ளும்வகையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடந்தது.
கோலிவுட்டில் வரலட்சுமி குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவர் அறிமுகமான போடா போடி திரைப்படம் போதிய வரவேற்பை பெறாவிட்டாலும் அந்தப் படத்தில் வருவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. நடனம், அழகு, திறமை என அனைத்தையும் பெற்ற நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவருக்கு அவர் எதிர்பார்த்தபடி அடுத்தடுத்து பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. இருந்தாலும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

தாரை தப்பட்டை: சூழல் இப்படி இருக்க இயக்குநர் பாலா இயக்கத்தில் சசிக்குமார் நடித்த தாரை தப்பட்டை படத்தில் ஹீரோயினாக நடித்தார் வரலட்சுமி. அந்தப் படத்தில் சூறாவளி என்ற கேரக்டரை ஏற்ற அவர் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். நிச்சயம் தாரை தப்பட்டை திரைப்படம் தனக்கு பெரும் பெயரை பெற்று தரும் என்ற நம்பிக்கையில் இருந்தவருக்கு; அவர் நினைத்தபடியே பெயரை பெற்று தந்தது. ஆனால் சரளமாக வாய்ப்புகளைத்தான் பெற்று தரவில்லை.

இருந்தாலும் படங்கள்: பெரிய ஹீரோக்களுடன் நடிக்கலாம் என்று கணக்கு போட்டவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருந்தாலும் விக்ரம் வேதா, மிஸ்டர் சந்திரமௌலி, சர்கார், சண்டகோழி 2 உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான ரோலை செய்தார். மேலும் தெலுங்கிலும் அவர் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். கடைசியாக அவர் தமிழில் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படத்திலும், தெலுங்கில் சபரி என்ற படத்திலும் நடித்திருந்தார். அடுத்ததாக தனுஷுடன் ராயன் படத்திலும் நடித்திருக்கிறார்.

திருமணம்: சூழல் இப்படி இருக்க அவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ்வை காதலித்துவந்தார். நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வரலட்சுமியின் திருமணத்துக்கு சரத்குமாரும், அவரது குடும்பத்தினரும் ஓகே சொன்னதை அடுத்து தாய்லாந்தில் அவர்களது திருமணம் கடந்த இரண்டாம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. தாய்லாந்தில் திருமணம் வைத்ததற்கு நிக்கோலாய்தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. அதில் இரு குடும்பத்தினரின் உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள்.
களைகட்டிய வரவேற்பு: திருமணம் தாய்லாந்தில் நடந்தாலும் அரசியல் பிரமுகர்களும், திரையுலக பிரபலங்களும் கலந்துகொள்வதற்கு வசதியாக திருமண ரிசப்ஷன் நிகழ்ச்சி சென்னையில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக அவர்களது வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. வரலட்சுமி பழுப்பு சிவப்பு நிற கவுனும், நிக்கோலாய் கோட் ஒன்றையும் அணிந்திருந்தார்கள். இந்த திருமண வரவேற்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி. தயாநிதி மாறன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.
அதேபோல் திரைத்துறையிலிருந்து இயக்குநர் பாலா, நடிகர் ஜீவா, தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, நடிகை ரோஜா, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் ஹரி, நடிகர் விஜயகுமார், நடிகர் பாலகிருஷ்ணா, நடிகை ஆண்ட்ரியா, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் சிவக்குமார், எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா, சுந்தர்.சி, குஷ்பூ, இயக்குநர் ஏ.எல்.விஜய், விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன், மணிரத்னம், சுஹாசினி உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துகொண்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். அதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











