விஜயகாந்த் நினைவேந்தல்: இப்படி ஒரு நாளை நான் எதிர்பார்க்கவில்லை.. சரத்குமார் உருக்கமான பேச்சு!
சென்னை: நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.
மேலும், விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள இயலாத அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப்பலரும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் விஜயகாந்த் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில், சங்க தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். இதில் பேசிய சரத்குமார். விஜயகாந்த் மறைவை நினைத்து வடிவேலு நிச்சயம் அழுது இருப்பார் என்றார்.
சரத்குமார் பேச்சு: இப்படி ஒரு நிகழ்வு இப்படி ஒரு நிகழ்ச்சியில் என் வாழ் நாளில் கலந்து கொள்வோம் என்று நாம் அனைவரும் நினைத்துப்பார்க்காத ஒன்று. விஜயகாந்தின் இழப்பு தமிழ் திரையுலகத்திற்கு மட்டுமில்லாமல் தமிழ் சமூதாயத்திற்கே மாபெரும் இழப்பு. 1990ம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் அவர்களை நான் சந்தித்தேன். என் வாழ்க்கையில் நான் ஒரு மிகப்பெரிய இழப்பை சந்தித்த போது ஒரு நண்பர் என்னை விஜயகாந்திடம் அழைத்து சென்றார். அப்போது புலன்விசாரணை படத்திற்கு ஆள் தேடிக்கொண்டிருந்தார்கள். அப்போது, நான் மீசை எடுத்தால் எப்படி இருக்கும் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். நான் உடனே அருகில் இருக்கும் ரோகினி லாஜிக்கு சென்று என் மீசையை எடுத்துவிட்டு அவர்கள் முன் நின்றேன். மீசை எடுத்த நாளில் விஜயகாந்தை முதல் முதலில் சந்தித்தேன் தற்போது மீசை எடுத்த பிறகு அவரை சந்திக்கும் சூழ்நிலை அமைந்துவிட்டது.
பதறிப்போனேன்: அவரது இழப்பு செய்தி கேட்டு மிகவும் துவண்டு போனேன், நான் வெளிநாட்டில் இருந்ததால் என்னால், அதில் கலந்து கொள்ள முடியாமல் போனது. வந்த பிறகு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினேன். அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. இவரை நாம் இழந்துவிட்ட இந்த சூழ்நிலையில் அவரின் குணம், மற்றவர்களிடம் பழகுகின்ற குணம்,வள்ளல் குணம் ஆகியவற்றை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
மாமனிதன்: புலன்விசாரணை படப்பிடிப்பின் போது எனக்கு அடிபட்டுவிட்டதால் 3 நாள் ஓய்வில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது விஜயகாந்த் அவர் எப்போது வருகிறாரோ வரட்டும் வந்த பின் படப்பிடிப்பை நடித்திக்கொள்ளலாம் என்றார். ஆனால் நான்,இரண்டு நாள் ஓய்வு எடுத்துவிட்டு சென்றதால் உரிமையோடு என்னிடம் எதற்கு வந்தீங்க என்று கேட்டவர் விஜயகாந்த். அதே போல கேப்டன் பிரபாகரன் படத்தில் நான் கமிட்டான போது கழுத்தில் அடிபட்டு எழுந்து நடக்கக்கூட முடியாமல், இருந்தேன். அந்த நேரத்திலும் எனக்கு உடல்நிலை சரியாகவும் வரை காத்திருந்து அந்த படத்தில் என்னை நடிக்க வைத்தவர் மாமனிதன் விஜயகாந்த்.
வடிவேலு அழுது இருப்பார்: மேலும், வடிவேலு இறுதிசடங்குக்கு வரவில்லை என்றாலும், நிச்சயம் அவர் வீட்டில் விஜயகாந்தை நினைத்து அழுதுஇருப்பார். வந்தால் வேறு எதாவது பிரச்சனை ஆகும் என்று நினைத்து இருக்கலாம். ஆனால், மறப்போம் மன்னிப்போம் என்ற மனம் கொண்ட விஜயகாந்திற்கு இதெல்லாம் ஒரு விஷயமாக நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார், ஆனால் வடிவேலு அவர்கள் நிச்சயமா அழது இருப்பார் என்று சரத்குமார் அந்த நிகழ்ச்சியில் பேசினார்.


Click it and Unblock the Notifications











