மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து நிற்கும் சரத்குமார்!
வில்லனாக அறிமுகமாகி, ஹீரோவாக வளர்ந்த நடிகர்கள் பட்டியலில் சரத்குமாருக்கும் இடம் உண்டு. 1988-ல் கண் சிமிட்டும் நேரம் படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்த சரத்குமாருக்கு, அதன் பிறகு பெரிய பிரேக் கிடைக்கவில்லை.
1990-ல் ஆர்கே செல்வமணி விஜய்காந்தை வைத்து உருவாக்கிய பிரமாண்ட வெற்றிப் படமான புலன் விசாரணையில் சரத்குமார்தான் மெயின் வில்லன். அவரது கலக்கலான நடிப்பு பேசப்பட்டது. தொடர்ந்து சில படங்களில் வில்லனாக வந்தவர், பாலைவனப் பறவைகள் என்ற படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்தார். அவருடன் நடித்த இன்னொரு ஹீரோ ஆனந்தராஜ்.

அதன் பிறகு சரத்குமாரின் கேரியரில் தொடர்ந்து முன்னேற்றம். சேரன் பாண்டியன், சூரியன் என அவ்வப்போது ஹிட் கொடுத்த அவர், நாட்டாமைக்குப் பிறகு முன் வரிசை நாயகர்களில் ஒருவராகிவிட்டார். 2010 வரை சரத்குமாருக்கென ஒரு ரசிகர் வட்டம் இருந்தது. அதன் பிறகு இளம் தலைமுறை நடிகர்கள் ஆதிக்கம் வந்துவிட்டது.
2010-க்குப் பிறகு சரத்தும் தமிழில் மட்டும் நடித்துக் கொண்டிருக்காமல் தெலுங்கு, மலையாளம் என தன் கவனத்தைத் திருப்பினார். கவுரவ வேடங்களிலும் நடித்தார்.
இப்போது மீண்டும் வில்லனாக அவதாரம் எடுத்துள்ளார். இந்த முறை தமிழில் அல்ல, தெலுங்கில். அல்லு அர்ஜூன் நடிக்கும் என் பேரு சூர்யா, என் வீடு இந்தியா படத்தில் அவர் மெயின் வில்லனாக நடிக்கிறார். ஏற்கெனவே அல்லு அர்ஜூனுடன் பன்னி படத்தில் நடித்துள்ளார் சரத்குமார். இப்போது இரண்டாவது முறையாக இணைகிறார்.
இந்தப் படத்தின் ஹைலைட்டே அல்லு அர்ஜூன் - சரத்குமார் இடம்பெறும் ஒரு பிரம்மாண்ட சண்டைக்காட்சிதானாம். தலைப்பை மீண்டும் படிங்க!


Click it and Unblock the Notifications











