ரெடி டேக் ஆக்ஷனுக்கு மீண்டும் தயாராகும் குட்டி புலி சரவண சக்தி
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வரும் இயக்குநர் சரவண சக்தி, விரைவில் தனது அடுத்த படத்தை இயக்கும் வேலையில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக ஒரு முன்னணி கதாநாயகருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி பின்பு நடிகராக ஜொலித்தவர்கள் மணிவண்ணன், மனோபாலா, சிங்கம்புலி என குறிப்பிட்ட சில பேர் உள்ளனர். அந்த வரிசையில் இப்போது இயக்குநர் மற்றும் நடிகர் குட்டிப்புலி புகழ் சரவண சக்தியும் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தண்டாயுதபாணி படத்தின் மூலம் இயக்குநராக அடியெடுத்து வைத்தவர் சரவண சக்தி. அந்த படம் இவருக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றத் தந்தது.
அது மட்டுமில்லாமல் நல்ல இயக்குனர் என்ற பெயரையும் பெற்றுத் தந்தது. அதன் பின்பு மறைந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் உடன் இணைந்து இவர் இயக்கிய நாயகன் படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வசூலையும் வாரிக் குவித்தது.
ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு சசிகுமாரின் நடிப்பில் வெளிவந்த குட்டிபுலி படத்தில் இயக்குனர் முத்தையா இவரை நடிகனாக அறிமுகம் செய்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதைத் தொடர்ந்து மருது, சண்டக்கோழி 2, கொடிவீரன், தர்மதுரை போன்ற படங்களில் நடித்து அசத்தியவர், தற்போது மாமனிதன், ரண சிங்கம், அடுத்த சாட்டை, வால்ட்டர் என 25 படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார்.
எனினும் தனக்குள் உறங்கிக்கிடந்த இயக்குநர் என்ற படைப்பாளன், திடீரென முழித்துக்கொண்டு இவரை விடாது கருப்பாக துரத்தவே R.K.சுரேஷ் நடிப்பில் பில்லா பாண்டி படத்தை இயக்கினார் இப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழில் தற்போது முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வரும் இவர், விரைவில் தனது அடுத்த படத்தை இயக்கும் வேலையில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக ஒரு முன்னணி கதாநாயகருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இயக்குநராகி நடிப்பில் அசத்தியவர் மீண்டும் இயக்கத்தில் தடம் பதிக்க இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











