பட தலைப்புக்கு எதிர்ப்பு: போஸ்பாண்டியாக மாறிய 'சரவணன் என்கிற சூர்யா'
நடிகர் சூர்யாவின் எதிர்ப்பு தீவிரமானதை அடுத்து 'சரவணன் என்கிற சூர்யா' திரைப்படம் போஸ்பாண்டி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அறிமுக நடிகர் ராஜா சுப்பையா தயாரித்து நடித்திருக்கும் படம்தான் இந்த 'சரவணன் என்கிற சூர்யா'. இந்த படத்தின் தலைப்பால் சர்ச்சைக்குள்ளாகி பெருத்த மன கஷ்டத்துக்கு ஆளானார் ராஜா சுப்பையா.
சூர்யாவைபோல் கவர்ச்சியான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்று எண்ணும் ஒரு வாலிபனின் கதையாக இந்தப் படம் உருவாகிறது.
சூர்யாவின் நிஜ பெயர், சரவணன். அதையே பட தலைப்பாக வைத்திருப்பதை அறிந்து சூர்யா அதிர்ச்சியடைந்தார். தனது பெயரை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருப்பது சூர்யாவுக்கு பிடிக்கவில்லையாம். மேலும் பட தயாரிப்பாளரை தொடர்புகொண்டு பட டைட்டிலை மாற்றி வைக்கும்படி சூர்யா கேட்டாராம்.

உறுதியாக மாற்றமாட்டேன்
படத்தின் தலைப்பை மாற்றுவது என்பது படத்தையே கைவிடுவதற்கு சமமாகிவிடும். தற்போது வைத்துள்ள டைட்டில்தான் படத்திற்கு பொருத்தமானது எனவே டைட்டிலை மாற்ற முடியாது என்று ராஜா சுப்பையா பதில் கூறிவிட்டார்.

அதிகரித்த எதிர்ப்பு
எனினும் சூர்யா தரப்பில் இருந்து மறைமுகமாக பல எதிர்ப்புகளும் எழுவதாகவும், படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் தடுக்கிறார்கள் என்று ஓப்பன் ஸ்டேட்மெண்டும் அளித்திருந்தார் ராஜா சுப்பையா.

போஸ்பாண்டியாக மாற்றம்
கடைசியில் வேறு வழியின்றி படத்தின் தலைப்பான சரவணன் என்கிற சூர்யாவை தூக்கிவிட்டு போஸ்பாண்டி என்று மாற்றி வைத்துவிட்டனர். படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது...

இது யாரும் கேஸ் போடமாட்டாங்களே
போஸ்பாண்டி என்ற தலைப்பை தன்னுடைய அடுத்த படத்திற்காக பதிவு செய்து வைத்திருந்தாராம் ராஜா சுப்பையா, வேறு வழியின்றி தன்னுடைய அறிமுக படத்திற்கே அதனை பயன்படுத்திக் கொள்ளப்போவதாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











