பிக் பாஸ் சீசன் 3: சேரனை மரியாதைக் குறைவாக சரவணன் பேசியிருக்கக் கூடாது- ரமேஷ் கண்ணா
சென்னை: எத்தனையோ தரம் வாய்ந்த படைப்புகளை தமிழ் திரையுலகத்துக்கு அளித்த இயக்குநர் சேரனை நடிகர் சரவணன் மரியாதை இல்லாமல் பேசியது கண்டிக்கத் தக்கது என்ற நடிகரும் இயக்குநருமான ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியைப் பற்றி பல பிரபலங்களும் தங்களுடைய அபிப்ராயங்களை தெரிவித்து வருகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இயக்குநர் மனோபாலா ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பற்றி கருத்து தெரிவித்த போது, அதெல்லாம் ஒரு நிகழ்ச்சியே கிடையாது, அதெல்லாம் சுத்த ஹம்பக்(Humbug), எல்லோருமே சொல்லிவைத்து நடப்பது போல் நடந்து கொள்கின்றனர், என்று தன்னுடைய மனக்குமுறலை கொட்டி இருந்தார்.
இந்நிலையில் இன்று, நடிகரும் இயக்குநருமான ரமேஷ் கண்ணா நடிகர் சரவணனை கண்டித்துள்ளார். என்னுடைய நண்பர் நடிகர் சரவணன் இயக்குநர் சேரனை மரியாதைக் குறைவாக வாடா போடா என அழைத்து பெரிய தவறு என்றும் அவர் அப்படி பேசி இருக்கக்கூடாது என்றும் தெரிவித்ததோடு, அவர் அப்படி பேசியிருந்தால் அதற்காக அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இயக்குநர் சேரன் தமிழ் திரையுலகத்திற்கு மிகப்பெரிய படங்களை அளித்தவர். பாண்டவர் பூமி, பொற்காலம், பாரதி கண்ணம்மா, ஆட்டோ கிராஃப், தவமாய் தவமிருந்து போன்ற சமூக சீர்திருத்த கருத்துக்களையும், குடும்பப் பாங்கான தரமான படங்களை படைத்தவர். அப்படிப்பட்ட தரமான படைப்புளை நம்மால் இனிமேல் பார்க்கவே முடியாது.
அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரை பொதுவெளியில் சரவணன் அப்படி பேசியிருக்கக்கூடாது. தனிப்பட்ட முறையில் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொண்டால் பரவாயில்லை. ஆனால் நான்கு பேர் கூடும் பொது இடத்தில் சரவணன் அப்படி மரியாதை இல்லாமல் நடந்து கொண்டது, இயக்குநர் சேரனுக்கு மிகுந்த மன வேதனையை அளித்திருக்கும்.
பொது வெளியில் அவரை வாடா போடா என்று அழைத்தால், அது உங்களுக்குத் தான் மரியாதை குறைவு என்று நடிகர் சரவணனுக்கு அறிவுரை சொல்லியிருக்கிறார். சரவணன் ஏற்கனவே அதிகமாக கோபப்படுவார். அவருடன் நான் ஏற்கனவே அபிராமி, பொண்டாட்டி ராஜ்ஜியம் போன்ற படங்களில் நடித்துள்ளேன். அப்போதும் அவர் அப்படித்தான் நடந்து கொள்வார் என்று ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.
சரவணன் ஒரு முறை, இந்தியாவே கொண்டாடும் மிகப்பெரிய இயக்குநர் பாக்கியராஜையே அவரெல்லாம் ஒரு நடிகரே கிடையாது என்று சொல்லியிருக்கிறார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் கலையுலக வாரிசு என்று சொல்லப்பட்ட அவரையே சரவணன் அவ்வாறு சொல்லியிருக்கிறார்.
தந்தை பெரியார் அவர்களே தன்னை விட வயதில் சிறியவர்களையும் மிகுந்த மரியாதையுடன் தான் அழைப்பார். அவரே அப்படி இருக்கும்போது நாமெல்லாம் எம்மாத்திரம். அதனால் நண்பர் சரவணன் தன்னுடைய கோபத்தை தயவு செய்து கட்டுப்படுத்தி குறைத்துக் கொள்ளவேண்டும் என்றம் ரமேஷ் கண்ணா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











