சர்கார் வழக்கு.. கதை பிரச்சினை தொடர்பாக பதிலளிக்க சன்பிக்சர்ஸ்-க்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு
சர்கார் கதை தொடர்பாக பதிலளிக்க சன் பிக்சர்ஸ்க்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: சர்கார் படத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் படத்தின் தயாரிப்பாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். தீபாவளி ரிலீசாக இப்படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், சர்கார் படத்தின் கதை, திரைக்கதை தன்னுடையது என்றும், எனவே அப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வருண் (எ) ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், 'செங்கோல் என்ற தலைப்பில் நான் கதை எழுதினேன். இந்தக் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். என்னுடைய கதையை திருடி, சர்கார் என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் செய்தேன். அந்த சங்கத்தின் தலைவர் கே.பாக்கியராஜ், இருதரப்பையும் அழைத்து விசாரித்தார்.
இறுதியில், இருவரது கதையும், ஒரே கதை தான் என்று உத்தரவிட்டுள்ளார். எனவே, சர்கார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். அந்த படத்தின் கதை என்னுடையது என்றும் அறிவிக்க வேண்டும்' என வருண் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் நீதிமன்றத்தில் நேற்று முறையிட்டார். அதற்கு பதிலளித்த நீதிபதி, 'ஏற்கனவே எதிர்தரப்பினர் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதால், இந்த வழக்கு மனுவை எதிர்தரப்பினருக்கு வழங்க வேண்டும். இந்த வழக்கு வியாழக்கிழமை (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' எனத் தெரிவித்தார்.
அதன்படி, இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, படத்தின் கதை தொடர்பாக தயாரிப்பாளர் தரப்பில் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, சர்கார் படத்துக்கு எதிராகவும், படத்தை வெளியிட தடை கேட்டும் வழக்கு தொடரப்படும் என்ற தகவல் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வெளிவந்த வண்ணம் இருந்தன.
இதையடுத்து, தங்கள் கருத்தை கேட்காமல், இந்த படத்துக்கு தடை விதிக்கக்கூடாது என்று சர்கார் படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் 'கேவியட்' மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications